December 31, 2008

புத்தாண்டு வாழ்த்தும் பூசணிக்காய் அல்வாவும் :)

அனைவருக்கும் எங்கள் சார்பாகவும் பொழில்குட்டி சார்பாகவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

உங்களுக்காக இந்த பூசணிக்காய் அல்வா எனது புத்தாண்டு இனிப்பு :)
பின்குறிப்பு:
செய்முறை விளக்கம் தேவையெனில் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

December 30, 2008

என் இனிய 2008 ஆண்டிற்கு நன்றி பல கோடி

இந்த ஆண்டிற்கு நன்றி சொல்லும் விதத்தில் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் "சந்தனமுல்லை" அவர்களின் பதிவினைப் படிக்க நேர்ந்ததும் நானும் எழுதிவிட்டேன் :) நன்றி சந்தனமுல்லை :)

இந்த ஆண்டு என் வாழ்வில் மறக்க இயலாத ஆண்டு என்று கூட கூறலாம் :)
என் பொழில்குட்டி பிறந்த ஆண்டு :)

பிரசவத்தினால் நான் நடக்க இயலாத போது பொழிலனின் அதிர்ஷ்டமோ என்னவோ நான் இரண்டு மாதங்களில் நடக்கத் துவங்கிவிட்டேன்!
அவருடைய வருகை எங்கள் வாழ்விற்கான பொருளை எங்களுக்கு உணர்த்தியது! இந்த ஆண்டு எங்கள் வாழ்வில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது!

முதன் முதலாக ஆபரேஷன் தியேட்டரில் வைத்து எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி அவனை என்னிடம் காட்டிய அந்த தருணம், அவனை மெதுவாகத் தொட்டு "ரோஜா போல அழகா இருக்கு தம்பிப் பாப்பா!" என்று நான் கூறிய தருணம் இவையெல்லாம் என் வாழ்வின் அதிகப்படியான மகிழ்ச்சியினை அளித்த தருணங்கள் :) அந்த வகையில் இந்த ஆண்டு என் வாழ்வின் பொன்னான ஆண்டு! :)

என் கணவர் மூலமாக எங்கள் திருமணத்திற்கு முன்பே வலையுலகைப் படிக்கத் துவங்கிய நான் இந்த ஆண்டில் தான் எழுதவும் துவங்கினேன் என் பொழில்குட்டியால்!

என்னை தொடர்ந்து எழுத உற்சாகப் படுத்தும் என் கணவருக்கும்,
நான் எவ்வளவு மொக்கை போட்டாலும் படிக்கும் ரொம்ப நல்லவர்களான உங்களுக்கும் நன்றி! :) அதோடு நில்லாமல் பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்தும் அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

என்னை முதன் முதலாக டேக் செய்த சந்தனமுல்லை அவர்களுக்கு என் சிறப்பு நன்றி!

என் மொக்கையையும் தாங்கிக் கொண்டு என்னைப் பின் தொடரும் நண்பர்களுக்கு என் நன்றிகள் பல!

ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வு மட்டுமின்றி நம் நாட்டின் வாழ்வில் நமது சந்திராயன் விண்ணோக்கி சென்று இந்த உலகமே நம்மைப் பார்த்து நமக்குப் பெருமை சேர்த்ததும் இந்த ஆண்டில் தான்!

இத்துணை மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியே இதே ஆண்டில் ஏற்பட்ட மும்பை நிகழ்வு போன்ற சில கசப்பான நிகழ்வுகள் மேலும் தொடராமல் வரும் ஆண்டு உலக மக்கள் அனவருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம்!

எங்களுக்கான மகிழ்ச்சிகளையும், வளங்களையும்
ஏந்தி வரும் புத்தாண்டே வருக!
நம் நாட்டில் கலவரம், வேற்றுமை, பசி, பஞ்சம், பிணி நீங்கி
அமைதி நிலவி நீங்கி மகிழ்ச்சி பொங்க
பொங்கலை உடனழைத்து வரும் புத்தாண்டே வருக!

December 23, 2008

****கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்****

மகிழ்ச்சியான இந்த கிறிஸ்துமஸ் திருநாள்
உங்களுக்கு எல்லா வித நலன்களையும்,
மகிழ்ச்சிகளையும் என்றென்றும் வழங்கட்டும்...!!

எங்கள் பொழிலன் சார்பாக அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் :)

December 22, 2008

புதுப் பாட்டு பொழிலனுக்குப் பிடித்த பாட்டு :)

காகா காகா காகம் கரையும்
கிகி கிகி கிளி கத்தும்
கீச் கீச் கீச் கீச் எலி கத்தும்
கூ..கூ..... கூ..கூ..... குயில் கூவும்
கொகொகொகொ... கோழி கொக்கரிக்கும்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் கூவும்
ம்மா....ம்மா....மாடு கத்தும்
ம்மே....ம்மே....ஆடு கத்தும்
மியாவ்...மியாவ்....பூனை கத்தும்
லொள் லொள் லொள் லொள் நாய் குரைக்கும்
பக் பக் பக் பக் வாத்து கத்தும்


இது தான் இப்போதெல்லாம் நான் அடிக்கடி பொழில் செல்லக்குட்டிக்குப் பாடும் பாட்டு. செல்லக்குட்டி கண்ணு அம்மாடி மற்றும் இப்பாடல் இரண்டும் அவனுடைய விருப்பப் பாடல்கள். வேறு ஏதாவது ரைம்ஸ் பாடினால் அழுகையை நிறுத்தி சிரிப்பதில்லை. இந்த பாடலுக்கு உடனே சிரிப்பு வந்து விடுகிறது. ஒருவேளை நான் பாடுவதே அவருக்கு சிரிப்பாக உள்ளதோ என்னவோ? :) எப்படியே அழுகை நின்று சிரித்தால் சரி :)

ஆனால் அப்படியே அந்தந்த விலங்குகள் போல் ஓரளவிற்கு குரல் எழுப்ப வேண்டும். ரைம்ஸ் ராகத்திலேயே பாடலாம் :)

இது எளிதில் அவன் விலங்குகளை அடையாளம் கண்டறிய உதவும் என்று நம்புகிறேன். இப்படி விளையாட்டு மற்றும் இசை மூலமே முதல் இரண்டு வயது வரை வாழ்க்கைக் கல்வி, பொதுக் கல்வி போன்றவற்றை அவனுக்குக் கற்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். இந்த முறை சரியானதா என்று பின்னூட்டமிடுங்கள் அனுபவசாலி தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் :)

வளருகிறார் குறும்புக்கார பொழில்குட்டி :)

பொழில்குட்டிக்கு தற்போது ஆறாவது மாதம் துவங்கியுள்ளது :) ஏற்கனவே தெளிவாக "அம்மா" என்றழைக்கும் என் தங்கத்திற்கு இப்போது "அப்பா" என்று அரைகுறையாக ஆனால் "அழகாக" சொல்ல வருகிறது :) இதைக் கேட்டதும் அவர் அப்பாவைக் கையில் பிடிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் சேட்டைகள் சற்றே வலு பெற்றுள்ளன :) குப்புறப் படுத்துக் கொண்டு கண்களுக்கு எட்டும் பொம்மைகள் கைக்கு எட்டவில்லையென அடம் பிடிக்கிறார். "அம்மா... ம்மா" என்று என்னை அழைப்பார்; நான் திரும்பிப் பார்த்ததும் சிணுங்கிக் கொண்டே பொம்மையைப் பார்த்தால் அது அவருக்கு வேண்டும் என்று அர்த்தம்... நான் சென்று எடுத்துக் கொடுப்பேன் :)

அதைவிட சிரிப்பு என்னவென்றால் தவழ முயற்சிப்பது ஆனால் முடியாமல் போனதும் அழுவது. அவனிடம் விடாமுயற்சி என்னும் சிறந்த பழக்கம் இருப்பதை நாங்கள் பல முறை அவன் விளையாடும் போதும், தவழ முயற்சிக்கும்ப் போதும் கவனித்துள்ளோம் :) இது எனக்குப் பெருமையாக இருக்கிறது :) :)

அவரிடம் ஒரு பாடிக்கொண்டே நகரும் சேவல் இருக்கிறது... நான் அதைப் போட்டுவிட்டு தான் சமையலறைக் கடமைகளையாற்றிக் கொண்டிருப்பேன்.... ஆனால் இப்போது அந்த பொம்மை உதவுவதில்லை. ஏனென்றால் , அது நகருகிறது ஆனால் அதன் பின்னே நம் ஐயாவால் நகர முடியவிலை என்று கோவப்படுகிறார்.... அழுகிறார் :) சரி என்று நகரும் சைக்கிள் மாமா பொம்மையைப் போட்டுவிட்டால் அது சிறிது நேரத்திலேயே பாடுவதை நிறுத்திவிட்டு ஊர்ந்துக் கொண்டிருப்பதை மட்டுமே தொடரும், பாடல் சத்தம் நின்றதும் ஐயாவிற்கு அழுகை வந்துவிடும் :) சரியென்று யானை மாமாவைக் கொட்டு அடிக்கவிட்டால் ஒரே ஆர்வக்கோளாரில் அதைக் கையில் எடுத்துவிடுவார். ஏனென்றால் அந்த இரு பொம்மைகளையும் கையில் பிடிக்க முடியவில்லை ஆனால் இதைப் பிடிக்க முடிகிறதே. அந்த மகிழ்ச்சி தான் :)

ஆனால் அவன் என் வயிற்றில் இருந்த போதிருந்தே பேசிப் பழகியதால் தானோ என்னவோ யாராவது ஒருவர் அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். நான் காலையில் என் கணவருக்கு காலை மற்றும் மதிய உணவு சமைத்து எடுத்து வைத்துக் கொடுப்பதில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் தான் அவருக்குப் பேச்சுத் துணை தேவைப்ப்டும். பசிக்கும் போது நான் செல்வதும் பேசுவதற்கு என் கணவர் செல்வதும் மாறி மாறி நிகழ்ந்துக் கொண்டிருக்கும் :) தந்தையும் மகனும் பேசுவதே தனி ஒரு அழகு :)

ஆனால் எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அடிக்கடி அவருடன் பேசியாக வேண்டும் இல்லையென்றால் அன்று அதிகமாக அழுவார். ஆனால் எளிதில் சரி செய்து விடலாம். மிகவும் சிறிய குழந்தை தானே! :) எனக்கும் பகல் நேரத்தில் அதிக வேலை இருக்காது; அவர் தான் என் உலகம் நான் பகலில் என் உலகத்தை சுற்றிக் கொண்டு பல செய்திகளை அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன் :) அப்போது தானே அவர் விரைவில் வெளி உலகத்தை புத்திசாலித் தனமாக எதிர்கொள்ள முடியும்... :)

December 21, 2008

விளம்பரங்களுக்கு தேவை சென்சார்

இப்போதெல்லாம் தொலைகாட்சியில் விளம்பரங்கள் பார்க்க சகிக்கவில்லை
பெண்களைக் காட்சிப் பொருளாக்கிய விளம்பரங்கள் அதையும் தாண்டி தற்போது பெண்களின் குணத்தை இழிவு படுத்தும் அளவிற்குக் கேவலமாக சித்தரிக்கின்றனர்.

பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தும் அத்தகைய விளம்பரங்கள்:

ஏக்ஸ் ஆண்களுக்கான வாசனை திரவியம். அதை ஒரு ஆண் உபயோகப்படுத்தியதும் அவன் அந்த சாக்லேட் வாசனையினால் பெண்கள் அனைவரையும் கவருகிறான்; இதில் உச்சகட்டக் கொடுமை என்னவெனில் அதில் பெண்கள் அனைவரும் அவனைக் கண்டபடி கடித்து.... சே... சே.... என்ன ஒரு அசிங்கமான விளம்பரம்।

இப்படியாக வைகிங், பெப்ஸிகோ போன்ற பல விளம்பரங்களும் அதில் அடங்கும்.

இப்படிப் பெண்களை இழிவு படுத்தும் விளம்பரங்களினால் அவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

குழந்தைகளும் இத்தகைய விளம்பரங்களைப் பார்க்கின்றனர். இது அவர்கள் மன நிலையைக் கெடுத்துவிடாதா?

பெண்களை தெய்வம் என்று போற்றிய அதே மண் இன்று பெண்களை வியாபார நோக்கில் பார்க்கிறது. இந்த நிலை எதில் சென்று முடியும் என்று தெரியவில்லை.

இது போன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்காவது தங்களை கேவலமாக சித்தரிக்கும் இது போன்ற காட்சிகளில் நடிக்கிறோமே என்று தோன்ற வேண்டாம்?

என்ன சொல்வது? ஏற்கனவே ஒரு பதிவர் இது போன்று ஒரு பதிவிட்டுள்ளார். இப்போது நானும். இன்னும் சமூக அக்கறையுள்ள பெண்கள் என்னுடன் கைக்கோர்க்கலாம்... ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது... நம் அனைவரின் கூக்குரல் கேட்டாவது மாறட்டும் மீடியா!

December 17, 2008

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்....கொசுவர்த்தி சுருள்

இதோ மார்கழி பிறந்துவிட்டது....
என் வாழ்வில் இம்மாதம் மறக்கமுடியாத மாதம் :)
நான் சிறுபெண்ணாய் இருக்கும்போதிருந்தே நன்றாக கோலம் போடுவதாக எல்லாரும் பாராட்டுவார்கள் (சத்தியமாங்க வேணுமானா என் கோலம் போட்டோக்களை போடவா?) அதனால் இன்னும் ஆர்வம் அதிகமாகி நாள்தோறும் காலையிலேயே எழுந்து சாணி தேடி எடுத்து குச்சியால் நீரில் கரைத்து விட்டு ஆனால் கையால் தான் வாசல் தெளிப்பேன் :) (சாணம் ஒரு கிருமி நாசினி என்பதை அதிகம் நம்புவதால்)

பிறகு சிறிது நேரம் அதைக் உலர விட்டுப் பின்பு அதில் கோலம் போட ஆரம்பிப்பேன்.... இருப்பதிலேயே எங்கள் வீட்டுக் கோலம் தான் பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் தளராத உறுதி எனக்கு :) அதை பெரும்பாலும் நிறைவெற்றி விடுவேன் தேர்வு நேரங்கள் தவிர்த்து :)

ரங்கோலி, பூத்தொட்டி, யானை, மயில், தேர், கோயில், முருகன், புள்ளிக் கோலம், சிக்கல் கோலம் எனப் பல வகைக் கோலங்கள் போடுவோம் :) என் தங்கை தான் உதவியாள் வர்ணங்கள் எடுத்துக் கொடுக்க.... ஆனால் அப்போது நடக்குமே போட்டி... யார் வீட்டுக் கோலம் அழகாக உள்ளது என்று.... ஏகப்பட்ட பாராட்டு மழைதான்.... நான் போடும் கோலமே அழகுதான் என்று எல்லாரும் சொல்லும் போது பெருமையாக இருக்கும் :)

பூசணிப்பூ கிடைக்காது என்பதால் செம்பருத்தி, செவ்வந்தி, ரோஜா என்று பல விதப் பூக்களை கோலத்தின் மேல் வைப்போம்.

இது மட்டுமில்லை... கோயிலில் பாடல் பாடும் சிறார் கூட்டத்திலும் இருந்தோம்... கோலம் போட்டதும் குளித்து கோயிலுக்குச் செல்வோம்... பாடி பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மிதிவண்டியில் வேக வேகமாக வருவேன்... அது எனக்கு மிகவும் பிடிக்கும் :) அந்த பணிப் புகையைக் கிழித்துக் கொண்டு வண்டி ஓட்டுவதாக எனக்கு ஒரு எண்ணம் :)

சில நாட்களில் வீதியில் பாடிக்கொண்டு வரும் எங்கள் நண்பர்களுக்கு காலை மிதமான சூடாக பால் கலக்கித் தருவோம் எப்படியும் ஐம்பது பேருக்குக் குறையாமல் வருவார்கள் :)

இது போதாதென்று பள்ளியில் எங்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை விருப்ப வகுப்பு உண்டு. அதையும் கற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடம் செய்வதற்கு முன் அப்பா, அம்மாவிற்குப் பாடிக் காட்டுவேன் (பாவம் தான் அவர்கள் :) )

இப்படியாகச் சென்ற மார்கழி மாதங்களில் வருங்காலத்தில் நல்ல கணவன் அமைய வேண்டும் என்று அதிகாலை வாசல் தெளித்த பின் இறைவனை வேண்டிக் கொண்டு விளக்கேற்றுவேன் :-) ( வெவரந்தான் அப்பவே அப்படீனு நீங்கள் சொல்வது கேட்கிறது :-))

அப்போதெல்லாம் நான் ஒரு பூசாரி எங்கள் வீட்டிலும், பள்ளியிலும் :) நெற்றியில் நீண்ட கோடாகத்தான் திருநீறு இடுவேன்.

ம்ம்ம்.... இதெல்லாம் நான் பட்டமேற்படிப்பிற்காக சென்னைக்கு வருவரை தொடர்ந்து செய்தது..... இங்கு வந்த பின் மார்கழி மாதங்கள் தேர்வு, தூக்கம், அரட்டை, மாலை நேரத்தில் கோயில் என்று இரு வருடங்கள் கல்லூரி விடுதியில் கழிந்தது.

பிறகு திருமண வாழ்க்கை மற்றும் அலுவலகம் இரண்டிலும் கவனம் சென்றதால் என் கணவர், என் வயிற்றில் பொழிலன், அலுவலகம், வீடு என்று கடந்த வருட மார்கழி கடந்து சென்றது :) காலையிலேயே சமையல், சிற்றுண்டி எல்லாம் முடித்து வைத்து ஏழு மணிக்கு அலுவலகப் பேருந்தை பிடித்தாக வேண்டும்; கர்ப்ப கால சிரமங்கள் வேறு :)

ஆனால் அலுவலகத்தில் கடந்த வருடம் கோலப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற போது எங்கள் டீம் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகிவிட்டனர் :) அப்புறம் பொங்கலுக்கு அலுவலகத்தில் பூக்களால் கோலம் வரைந்தோம்.

இப்படியாக இன்னமும் மார்கழி என்றால் கொண்டாட்டமாகத்தான் உள்ளது :) இப்போது மார்கழி மாதம் அதிகாலை பொழில்குட்டியோடு தான் :) வெகு நேரம் குனிந்து பெரிய கோலம் போடு அளவிற்கு என் உடல் நிலை இன்னும் தேறாததால் அடுத்த வருடம் தான் அதைச் செய்ய வெண்டும் :) பொழில்குட்டி தான் உதவியாள் :)

அப்பாடா மொக்கை முடிந்தது....
பொறுமையாக கடைசிவரை வந்துவிட்டீர்களா? மிக்க நன்றி :-)

நீங்கள் யாராவது இந்த மார்கழி மாத அனுபவத்தைத் தொடரலாம் :)

December 16, 2008

"சனி நீராடு" - பொழிலன் செல்லக்குட்டி


அவ்வையார் "சனி நீராடு" என்று சொல்லிவிட்டார்களாம்... அதனால் என் அம்மா இப்படி என்னை எண்ணெய் தேய்த்து நீராட்டுகிறார்கள் :)
நான் எப்படி சமத்து தானே? :)

December 14, 2008

வெறியர்களின் வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எங்கே?

எழுமின்!

விழிமின்!

கருதிய கருமம் கைகூடும் வரை

உழைமின்! உழைமின்!



இது பாரதத் திரு நாட்டின் இளைஞர்களுக்காக விவேகானந்தரின் எழுச்சிக் குரல்। இன்றைய நம் இளைய சமுதாயம் இக்குரல் கேட்டு எழவில்லை என்றாலும் பரவாயில்லை. மழலைகள் பெற்றோரை இழந்து அரற்றும் குரல் கேட்டாவது எழுச்சி கொள்ளலாம்.

மும்பை தாக்குதல் பற்றி தான் இந்தப் பதிவு சந்தனமுல்லை அவர்களின் அழைப்பிற்கிணங்கி [தாமதமாக :( , பொழிலனுடன் நேரம் சரியாக இருக்கிறது :) ]



தீவிரவாதிகளுக்கு எதிராக போர் என்று போராடினால் போர் உண்டாகிவிடுமா. தொலைக்காட்சியில் பார்த்தேன் ஆளாளுக்கு போர் வேண்டும் என கத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். இது என்ன பாராளுமன்றத்தில் விற்கப்படும் பொருளா?



என் கருத்து என்னவென்றால் இந்த முதியோர் அரசியல் முறை மாற வேண்டும். இளைஞர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வர வேண்டும்.

அரசியல் என்பது பொழுது போக்கோ அல்லது பணம் ஈட்டும் தொழிலோ அல்ல. நம் தாய்நாட்டின் வாழ்க்கை. சிறுக சிறுக தீவிரவாதிகளின் வெறியாட்டத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கும் நம் இந்தியாவின், இந்திய மக்களின் வாழ்க்கை. இன்று கத்தும் இளைஞர்கள் அரசியல் முறையை மாற்ற முன் வரவேண்டும். என்னையும் உங்களையும் சேர்த்துதான்....



இன்று நாட்டின் எந்த ஒரு முடிவும் ஆட்சியாளர்களாலேயே எடுக்கப் படுகிறது எனும் போது போர் என்னும் முடிவும் நம் அரசியல் தலைவர்களே எடுக்க வேண்டும். அந்த இடத்தில் இளைஞர்கள் வந்தால் இந்த விவகாரத்திற்கு சரியான பதிலடியாக பல ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.



இல்லையென்றால் இப்படி முன்பே தாக்குதல் பற்றிய அறிவிப்பு கிடைத்தும் கோட்டைவிட்டிருப்பார்களா?



தாக்குதல் நடந்து முடிந்த பின்பு அவ்விடத்திற்குத் தீவிர பாதுகாப்பு போடுவதற்கு பதிலாக முன்பே கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா?



ஒவ்வொரு முறையும் இப்படி தாக்குதல் நிகழும் போது மட்டும் நாம் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுவதில் பயனில்லை. தேர்தலின் போது சிந்திக்க வேண்டும் , படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும், இளைஞர்களால் மட்டுமே நம் தாய்நாட்டின் தலையெழுத்தை மாற்ற இயலும்.



இழப்பின் வலி இன்னமும் இரணமாகவே உள்ளது. அந்த வடு ஆறும் முன்பே வெறியர்களுக்கு எதிராக நாம் திரள வேண்டும். இன்னும் எதற்காக போர் தொடுக்காமல் காத்துக்கொண்டிருக்கிறோம்? மிச்சம் மீதம் இருக்கும் காஷ்மீரையும் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்றா? அல்லது பாவம் மடையர்கள் ஏதோ சண்டையிடுகறார்கள் மன்னித்துவிடலாம் என்றா?



"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்"



என்ற குறள் இங்கு பொருந்தாது....



"குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்"



என்ற குறளே தற்சமயம் நமக்குப் பொருத்தமானது.



நம் கைகள் கோர்க்கட்டும்.

நம் இதயங்கள் சில இழப்புகளைத் தாங்கும் பக்குவம் உடையதாகட்டும்...

அப்போது தான் பெரும் இழப்புகளைத் தவிர்க்க இயலும்.



நம்மிடம் படை பலமில்லையா அப்படியானால் பல திறமையான இளைஞர்கள் எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் உதவுவார்கள்.



பண பலமில்லை என்று மட்டும் கூறவே கூடாது; நம் நாட்டுப் பெண்களின் ஒட்டுமொத்த நகைகளையும் சேர்த்தால் உலகிலேயே நாம் தான் பணக்கார நாடு! ஆச்சரியமாக உள்ளதா? இது தான் உண்மை!



போருக்குத் திட்டமிடுவதற்குத் தேவையான அதிக புத்திசாலிகளும் நம் நாட்டில் தான் உள்ளனர்; இதுவும் ஆதாரப்பூர்வமான உண்மை :)



பின் எதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்? தலைவர்களின் சம்மதத்திற்கா? அது எளிதில் கிடைக்காது :( இளைஞர்கள் கைக்கு ஆட்சி வரும்வரை....



பொறுத்திருந்தது போதும் புறப்படுவோம் புதியதோர் பாரதம் செய்ய...
அதில் தீவிரவாதமற்ற அமைதியை ஏற்படுத்த !!!

காஷ்மீரைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதற்காகவும்,
இந்தியாவின் அமைதியைக் குலைத்து வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் ஆடும் வெறியாட்டத்தை தடுத்து அவ்ர்களுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்; வெறியர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்..............


பின்குறிப்பு :
அக்காலத்தில் வீரத்தமிழ்த்தாய் ஒருத்தி தன் இரண்டு வயது மகன் கையில் வாளினைக் கொடுத்துப் போர்முனைக்கு அனுப்பி வைத்தாளாம். அத்தகைய தாய்மார்கள் வாழ்ந்த இந்நாட்டிலே தான் நாமும் வாழ்கிறோம். நமக்கும் அதில் பாதி எண்ணமாவது வர வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றினையும் வீரத்தையும் சேர்த்து ஊட்டிவிட வேண்டும். நம் பிள்ளைகள் இராணுவத்தை எதிர்காலமாக தேர்ந்தெடுத்தால் பாசத்தில் தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்.

என்னைத் தொடர்ந்து யார் வேண்டுமானலும் கைகோர்க்கலாம் இந்த அணியில் :)

December 6, 2008

ஒரு தாயின் புலம்பல்... எனக்கு ஒரு வழி கூறுங்களேன்.

எனக்கு பிரசவ விடுமுறை முடியப் போகிறது... எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் எங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை... என் அம்மா மற்றும் மாமியார் இருவருமே தனியாக இங்கு வந்து அதிக நாட்கள் இருக்க முடியாது ஏனென்றால் என் அப்பா மற்றும் மாமனாருக்கு சர்க்கரை நோய் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.... எங்கள் உறவினர்களில் வேறு யாரும் இங்கு வந்து இருக்கும் நிலையில் இல்லை... குழந்தைகள் காப்பகமும் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை... அதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.... அதனால் இப்போது பொழிலனை எப்படிப் பார்த்துக் கொள்வது என்றே புரியவிலை....

என்னுடைய அத்தை(மாமியார்) பொழிலனை அவர்களுடன் புதுச்சேரியில் விடுமாறு கேட்கிறார் ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன.... வார விடுமுறையில் மட்டுமே நாங்கள் பெற்ற பிள்ளையை பார்க்க முடியும்.... அதிலும் எல்லா வாரமும் அலைவது சற்று சிரமம் எங்கள் குழந்தைக்காக என்றாலும் அதிகப் படியான அலைச்சல் விரைவில் உடல் நிலையை பாதிக்கும்... அவனுக்காகத்தானே உழைக்கிறோம் ஆனால் அவனை தினமும் பார்த்து அவன் செய்யும் குறும்புத் தனங்களை ரசிக்க முடியாமல் அவனுக்கு கதைகளை சொல்லி மகிழ முடியாமல் அவனை ஊரில் விட்டுவிட்டு பின் எங்கள் வீடே வெறித்துப் போய்விடும் :( அவனை ஒரு நாள் பிரிவதும் எனக்கு மிகவும் சங்கடமான ஒன்று..... குழந்தைகள் மனதில் அது எவ்வளவு பேரிய ஏக்கத்தை ஏற்படுத்தும்... பாவம் வாய் விட்டுக் கூறக் கூடத் தெரியாது...

என் கணவர் என் வேலையை விடுவதே சரியான தீர்வு என்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.... ஏனென்றால் நான் மிகவும் விரும்பும் பணி அதில் இன்னும் நான் எந்த சாதனையும் செய்யவில்லை.... நன்கு படித்து கேம்பஸ் தேர்வினால் பெற்ற பணி அதுவுமில்லாமல் நான் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது.... அதற்குள் அதனை எப்படி விடுவது என்றே புரியவில்லை...

நான் கர்ப்பமாக இருக்கும் போது என் அலுவலகம் HCL எனக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்து என்னை நன்கு பார்த்துக் கொண்டது... வேலையை விட்டுவிட்டால் அப்படிப் பட்ட நிறுவனத்திற்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன் என உறுத்துகிறது.... உங்களுக்கு ஏதேனும் தீர்வு தோன்றினால் கூறுங்களேன்.... என் குழந்தை எனக்கு அதை விட முக்கியம்.... என்ன செய்வது?