January 3, 2009

ஜானி ஜானி யெஸ் பாப்பாவும்... சாப்பாட்டு ராமிகளும் :)

நேற்று பொழிலனின் பாப்பாப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடைப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த "ஜானி ஜானி யெஸ் பாப்பா" பாடல் என் கல்லூரி கலாட்டாக்களை நினைவூட்டியது...... அதனால் தான் உடனடியாக மொக்கையைத் துவங்கிவிட்டேன் :)


நான் கணிப்பொறி அறிவியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை "ஜாவா" விரிவுரையாளர் என்றும் இல்லாத அதிசயமாக வகுப்பிற்கு வரவில்லை.... அவ்வளவுதான் எங்கள் கூட்டணி மக்கள் அனைவரும் சேட்டைக் காட்டத் துவங்கிவிட்டோம்!


கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த
"சேட்டை சுந்தரி" ( சுந்தரியின் அடங்காத சேட்டை காரணமாக இப்பெயர்)
தனது அழகிய கர கர குரலில் பாட ஆரம்பித்தாள்.... ஏதேதோ பாடி கடைசியில் இந்த ஜானி ஜானி பாட்டைப் பாடியதும் நாங்கள் எல்லோரும் குதூகலமாகிவிட்டோம்! இருக்காதா பின்னே? குழந்தைகள் தானே!

பின் எல்லாரும் சேர்ந்து அப்பாடலைப் பாட அந்நேரம் பார்த்து விரிவுரையாளர் உள்ளே நுழைய அவ்வளவு தான்.... போச்சுடா நல்லா வாங்கப் போகிறோம் என்று அனைவரும் பம்ம அவரோ சிரிக்கிறார் :) பதிலுக்கு நாங்களும் அசடு வழிய... அவரோ பாட்டு சூப்பர் என்ன ஆச்சு எல்லாருக்கும் ரைம்ஸ் பாட்டெல்லாம் ஒலிக்குது என்று கூறியவாரே அனைவருக்கும் "ஜாவா"-லிருந்து ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டு இதற்கு சரியான பதிலை தன்னிடம் கூறுபவர் மட்டுமே உட்கார வேண்டும் மற்ற அனைவரும் நிற்க வேண்டுமெனக் கூறிவிட்டார்! அப்புறம் என்ன... அந்தப் பாட வேளை முழுவதும் நின்று கொண்டே பிழைப்பு ஓடியது! :)


இப்படிதான் முதலாமாண்டில் ஒரு நாள் கணிதத்துறைப் பாட வேளையில் எங்கள் தோழி ஒருத்தி எங்கள் அனைவருக்குமாய் சேர்த்து எடுத்து வந்த புலி சாதக் கட்டைக் காட்ட எங்களுக்கு நாவில் எச்சில் ஊறிவிட்டது!

உடனே பசியும் வர என்ன செய்வதென்று மாப்பிள்ளை பென்ச் அணியினர் கலந்தாலோசித்தனர் :) பின் எல்லாரும் அடுத்தப் பாட வேளையில் அதை உண்பதென சபதம் எடுத்துக் கொண்டோம்!


அடுத்த வகுப்பிற்கு "மேக்கப் பஞ்சு" தான் வரும் சமாளித்துவிடலாம் என்று தைரியம் தான்! "மேக்கப் பஞ்சு" ஒரு கணிதத்துறைப் பேராசிரியர்.... வயதானவர்..... ஆனால் தன்னை அலங்கரித்திற்கும் விதமோ வயதுப் பெண்கள் தோற்றார்கள்... இதில் காதில் பஞ்சு வேறு! :) இப்போது புரிந்திருக்குமே பெயர்க் காரணம் :)


எடுத்த சபதம் முடிப்போம் நாங்கள் என்று அனைவரும் பேசி வைத்தத் திட்டத்தின் படி பஞ்சு வகுப்பைத் தொடங்க நாங்கள் அனைவரும் கவனமாக வகுப்பைக் கவனித்துக் கொண்டே உண்ணத் தயாரானோம் :) சில மாணவிகள் பென்ச் அடியில் உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு சோற்று உருண்டைகளைத் தர நாங்கள் மேலே உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம்! சற்று நேரத்தில் உணவின் மணம் வீச... அவ்வளவு தான்... "பஞ்சு" காதில் தானே பஞ்சு.... மூக்கு மோப்பம் பிடித்துவிட்டது!

அவர் "யாரது வகுப்பிலேயே உண்பது" என்று கேட்க நாங்கள் உடனே அவசரமாக வாயை மூட கீழே இருந்தவர்கள் பொட்டலங்களை மூடிவிட்டு நன்கு ஒளிந்து கொண்டனர்! ஆனால் பஞ்சு விடவில்லை.... மோப்பம் பிடித்து எங்கள் இடத்திற்கு வந்துவிட்டார்.... உடனே நாங்கள் அனைவரும் எச்சில் கையை மறைத்துக் கொண்டே எழுந்து நின்றோம்.... :) அவர் உடனே ஆரம்பித்துவிட்டார்.... வர வர நாங்கள் சேட்டை அதிகமாக செய்கிறோம் ஆனால் வகுப்பிலேயே நன்கு படிக்கும் மாணவிகளும் நாங்கள் தான் அதனால் எங்களை ஒன்றும் திட்டுவதற்கில்லை என்று புலம்பிக் கொண்டே எங்களை கை கழுவ அனுப்பி வைத்தார்! :) எப்படியோ எடுத்த சபதம் முடித்த வீரர் குலப் பெண்கள் நாங்கள்!

ஆனால் நான் இந்த சேட்டையை சென்னையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது முதுநிலை இறுதியாண்டில் கூட விடவில்லை.... அங்கும் மேசைக்கடியில் ரொட்டி, பழங்கள் எல்லாம் விடுதியில் இருந்து எடுத்து வந்து காலையில் சாப்பிடாமல் வீட்டிலிருந்து அவசரமாக வரும் மாணவ மாணவிகளுக்கு தருவேன் :)

நான் எனது கல்லூரி வளாகத்திலேயே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் கல்லூரி செமஸ்டர் விடுமுறை முடிந்து அனைவரும் கல்லூரிக்கு வரும் இறுதியாண்டின் முதல் நாளன்றே இதே முறையில் தான் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினேன் :)

இவ்வளவு ஏன்? எங்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவின் போது என் வயிற்றில் பொழிலன் :) நான் முதல் மாணவியாக தங்கப் பதக்கம் வாங்குவதால் காலை சீக்கிரமாகவே விழா ஒத்திகைக்குச் செல்ல வேண்டும்... அதனால் சரியாக உண்ணவில்லை :( அங்கு சென்று பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பிரித்து வாயில் அவ்வப்போது தள்ளிக் கொண்டே இருந்தேன்.... பின்னே பாப்பா பசியில் என்னை உதைக்கிறதல்லவா?
அப்போது திடீரென்று ஒத்திகையில் என் முறை வர கையில் இருந்த பாக்கெட்டை வைக்கத் தவறி எடுத்துக் கொண்டு மேடைக்கருகில் செல்ல உடனே துப்பட்டாவில் சுற்றி கையில் பிடித்துக் கொண்டே சென்றேன் :)

இப்படியாக எங்கள் சேட்டை அலுவலகத்திலும் தொடர்ந்தது!
நண்பர் ஒருவர் " அக்கா திருநெல்வேலி அல்வா சாப்பிட மாடிக்குப் போகலாம்" என்றதும் நான் அதெல்லாம் வேண்டாம் கொண்டா இப்படி என்று வாங்கி அனைவரையும் அலுவலகக் கேமரா பார்வைக்கு எட்டாத இடத்தில் அமரச் சொல்லி எங்கள் குழுவிற்கும் எனக்கும் பகிர்ந்து எல்லாரும் அவ்விடத்திலேயே சாப்பிட்டோம் :)

இப்படி இன்னும் நிறைய சேட்டைகள்! எல்லாவற்றையும் எழுதினால் அவ்வளவுதான்! இப்பவே படு மொக்கையாகி விட்டது :) அதனால் "போதும் அடங்கு ஆகாயநதி" என்று நீங்கள் கூறும் முன்பாகவே முடிக்கிறேன் :)

10 comments:

cheena (சீனா) said...

aakaa சேட்டைக்காரப் பொண்ணா - ம்ம்ம் - கல்லூரி சேட்டைகள் அலுவலிலும் தொடர்கிறதா ? ம்ம்ம்ம் - தங்கப்பதக்கம் - வாழ்க ! வளர்க !

Karthik said...

ஹா..ஹா.

மேக்கப் பஞ்சு? எப்படிங்க இப்படி கவிதையா பேர் வெச்சிருக்கீங்க?
:)

மகி said...

என்னக்க எல்லாமே சாப்பாட்டு விசயமா இருக்கு
மொதல்ல காலேஜ மாத்துங்க.

ஆகாய நதி said...

//
aakaa சேட்டைக்காரப் பொண்ணா - ம்ம்ம்
//

ஆமாம்... என்ன செய்ய...எல்லாம் பிறவி குணம் :)
இந்த பக்கம் வந்து வாழ்த்தினதுக்கு நன்றி சீனா சார் :)

ஆகாய நதி said...

//
ஹா..ஹா.

மேக்கப் பஞ்சு? எப்படிங்க இப்படி கவிதையா பேர் வெச்சிருக்கீங்க?
:)

//

ஆகா... நல்லா இருக்கா? நான் தான் வெச்சேன் :)

ஆகாய நதி said...

//
என்னக்க எல்லாமே சாப்பாட்டு விசயமா இருக்கு
மொதல்ல காலேஜ மாத்துங்க.
//

இனிமே என்னத்த மாத்துறது அதான் படிச்சு முடிச்சாச்சே இன்னும் என்ன படிக்க சொன்னாகூட நான் தயார் ஆனா இப்போ நான் தாயார் ஆனதால நேரம் இருக்காது :)

priyamudanprabu said...

//
இருக்காதா பின்னே? குழந்தைகள் தானே!
//
/
யாரு சொன்னது????

Anonymous said...

//( அங்கு சென்று பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பிரித்து வாயில் அவ்வப்போது தள்ளிக் கொண்டே இருந்தேன்.... பின்னே பாப்பா பசியில் என்னை உதைக்கிறதல்லவா?
அப்போது திடீரென்று ஒத்திகையில் என் முறை வர கையில் இருந்த பாக்கெட்டை வைக்கத் தவறி எடுத்துக் கொண்டு மேடைக்கருகில் செல்ல உடனே துப்பட்டாவில் சுற்றி கையில் பிடித்துக் கொண்டே சென்றேன் :)//

இந்த விஷயத்துல நீங்க யாரையும் நம்பலை பாத்தீங்களா, அங்கதான் நீங்க நிக்கறீங்க. இப்ப புரியுது, நீங்க எப்படி கோல்டு மெடல் வாங்கியிருப்பீங்கன்னு :)

அதெப்படி சாப்பாடு விஷயத்துல தலைவனும், தலைவியும் ஒரே மாதிரி இருக்கீங்க...

anbudan vaalu said...

பொழிலோட அம்மா இவ்வளவு வாலா???.....பாவம் பொழில் அப்பா....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன புலி சாதமா... வீரத்தாயே வணக்கம்..:)