December 3, 2009

வந்தாச்சு நாங்க! தொடங்கியாச்சு மொக்க!

சில மாதங்கள் திருச்சி சென்று திரும்பியாச்சு!
அங்கே இருந்ததால் என் தொல்லை இல்லாம எல்லாரும் தப்பிச்சிட்டீங்க... :)
இனி விடுவோமா? வந்துட்டோம்ல..... :)

பொழிலன் பற்றிய செய்திய இப்போலாம் அவனே சொல்லிடுவான் நான் தட்டச்சினா மட்டும் போதும்! :) அவ்வளவு வாய்!!! பின்னே புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்னைப் போல பேசுவானு பார்த்தா தாய் 80அடி பாய்த்தா குட்டி 160அடி பாயுது.... அவ்வ்வ்வ்.... ஆனா இப்படி மழலைய கேக்க கேக்க இன்பம்! :)

September 10, 2009

காதல்... அமுதோ நஞ்சோ?


மாய வலையில்

சிக்கி தேடினேன்

வலையே நீயாக

சிக்கியதோ உன்னில்

தேடியதோ என்னை

கிடைத்ததோ காதல்


ஏனோ கசக்கிறது

அன்று இனித்தவை

ஏனோ இனிக்கிறது

உன்னை நினைக்கையில்

யாரோ நீ யாரோ

என்னில் ஏனோ

வந்தே புகுந்தாய்


நொடிகள் தோறும்

இம்சை ஏனோ

காதல்

இது நஞ்சோ??

நொடிகள் தோறும்

இனிமை ஏனோ

காதல்

இது அமுதோ??


கன்னம் சிவக்க

இதயம் வலிக்க

கண்கள் பேச

தனியே சிரிக்க

இரவோ நீள

விடியல் தேடி

உன்னைக் காண

நானோ காத்திருக்க

ஏனோ மாற்றம்

உன்னால் தானோ!!!!!!!!

பின் குறிப்பு:
கவிதை போன்றும் அல்லாமலும் வந்த இந்த கவுஜக்கு கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் மன்னிக்கவும் :(







September 2, 2009

காத்திருத்தல்!





உனக்கான
என் நினைவுகள்...
நமக்கான
என் காதல்....
காத்திருக்கின்றன
உன் வரவுக்காக....
என்னோடும்
உனக்கான
என் முத்தங்களோடும்.....!

முத்திரை!!!



கண்களால் சிறைபிடித்து
கைகளால் அணைத்து
என் கூந்தலில்
உன் உயிரைக் கட்டி
ஊசலாடுபவனே...
நித்தம்
உன் முத்தம்
என் மீது
உன் முத்திரை
நான் உன்னவள் என்று!


August 31, 2009

எழும்பூர் இரயில் நிலையமும்.....

எழும்பூர் இரயில் நிலையமும், தி।நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களும் குறிப்பாக பொத்தேரி இவை என் வாழ்வின் இனிமை, மகிழ்ச்சி மட்டுமே பார்த்த இடங்கள்!

சின்ன வயதிலிருந்தே அடிக்கடி சென்னை வந்து பழகியிருந்தாலும் நான் என் மேல்நிலைப் படிப்பிற்காக சென்னையிலுள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன் அங்கு கேம்பஸ் இன்டெர்வியூ வாய்ப்புகள் அதிகம் என்பதால்! ஆனால் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த போது நான் வெளியே காட்ட விரும்பாத பயமும் பீதியும் ஒரு மாதிரியான உணர்வும் என்னை ஆக்கிரமிச்சது நிஜம்! ஆனால் அதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான்!

அடிக்கடி சென்னை விஜயம் என்பதால் எனக்கு எப்போது எழும்பூர் இரயில் நிலையம், மலைக்கோட்டை விரைவு இரயில், திநகர் ஆகியவை மனதிற்குப் பிடித்தமானவை :)


கல்லூரி படிப்பு நல்லவிதமாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் வார விடுமுறைகளை நாங்கள் வீணாக்குவதே இல்லை! ஒரு நாள் படிப்பு, ரெக்கார்ட், மெஸ் உணவு, அழகாகும் முயற்சிகள்(கி கி கி வெள்ளரிக்காய், தயிர், எண்ணெய் மற்றும் இன்னபிற பூசி 2மணி நேரம் குளிப்பது) ஆகியவை நடந்தேறும்.... அடுத்த நாள் காலை சுறுசுறுப்பாக எழுந்து குளித்து அழகாக ரெடியாகி(அவ்வ்வ் பார்ப்பவர்கள் பாவம்) மாடர்ன் சிம்பிளா ஜீன்ஸ்+குர்தா (அ) டீசர்ட் போட்டுக்கிட்டு கோயிலுக்கு போவோம் பிரகு மெஸ்ல அவசரகதியா உணவு முடிச்சிட்டு காலை 10மணி பீச் டிரெயின் தான் டார்கெட்...


நாங்கள் எங்கே ஊர் சுற்ற போனாலும் 10மணி டிரெயின் தான்.... நாங்க பெண்கள் மட்டும் சேர்ந்து போவதால லேடிஸ் பொட்டிக்குள்ள புகுந்துடுவோம்... உள்ளே போயி சிக்கிச்சின்னாபின்னமாகி கசங்கி பூச்சாண்டி மாதிரியே உருமாறி ( ஏற்கனவே அப்படித்தான்ற உண்மைலாம் இப்போ யோசிக்கப் படாது) நாங்க இறங்கும் இடம் திநகர் அல்லது எழும்பூர் அல்லது நுங்கம்பாக்கம்...

சென்னைல எங்கே போகனும்னாலும் இந்த மூன்று இடங்கள் போதும் இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் ரூட் பிடிச்சிடலாம் :)

ஸ்பென்ஸர் பிளாசா:
***********************

ஒரு வழியா எழும்பூர்ல இறங்கி ஆட்டோ பிடிச்சி 30ரூபாய் கொடுத்தா ஸ்பென்ஸர்ஸ் போலாம் வெயில் ரொம்ப இருந்தா அங்கே போய்ட்டா நல்லா சுற்றின மாதிரியும் இருக்கும் ஏசில இருந்தா மாதிரியும் இருக்கும்(எப்பூடி??) !

ஸ்பென்ஸர்ல தப்பித்தவறி கூட பெரிய கடைகளில் எதுவுமே வாங்கிடக் கூடாது..... போனோமா எல்லா பொருளையும் ரேட் கார்டோட பார்த்தோமானு இருக்கனும்.... அதுக்காக ஒண்ணுமே வாங்கலனா எப்பிடி அதுனால லைஃஸ்டைல்ல வேணும்னா ஏதோ ஒன்றிரண்டு வாங்கிக்கலாம்.... நான் பொதுவா புக், சாக்லேட், கிரீடிங் கார்ட் வாங்குவேன்! ஸ்பென்ஸர்ல கூட சீப்பா (அட ஸ்பென்ஸர்குள்ள அது தாங்க சீப்) துணிகள் வாங்க சில கடைகள் இருக்கு.... அது ரொம்ப உள்ளே போகனும்.... அங்கே 100ரூபாய்க்கு அழகான டாப்ஸ், 300ரூபாய்க்கு அழகழகான குர்தா, 350லிருந்து 700ரூபாய் வரை அழகான முழு நீள ஃபேஷன் ஸ்கெர்ட் கிடைக்கும்.... அட நெசமாதாங்க... ஆனா தரம் ரொம்ப நல்லா இருக்கும்!

அப்புறம் ஃபுட் கோர்ட் போயி அரைவயித்துக்கு ஏதாவது போட்டுகிட்டு லம்பா காசைக் கொடுத்துட்டு நடையகட்ட வேண்டியதுதான்...

அபிராமி மெகா மால்:
************************

இங்கே போகனும்னா நுங்கம்பாக்கம்ல இறங்கி பஸ் கிடைக்கும் இல்லனா நல்லா பேரம் பேசினா 40ரூபாய் இல்லனா 50ரூபாய் கொடுத்தா ஆட்டோல போயிடலாம் ! அது அழகான இடம் நல்லா பொழுதை போக்கலாம்... ஸ்பென்ஸரைவிட இங்கே ஃபேன்ஸி பொருட்கள் விலை சற்று குறைவு... அப்பிடி இப்படி சுற்றிக் கொண்டே இருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு தான் வருவோம்.... இங்கே தியேட்டரும் இருப்பதால் படம் பார்க்கலாம்.... நாங்க இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை கஜினி இங்கே பார்த்தோம்.... வெளியே வந்தால் கொஞ்சம் டீசென்டான திநகர்....

இஸ் ஃபன்னி சென்டர்:
*************************

அண்ணாநகர், நுங்கம்பாக்கம்ல இருந்து ஷேர் ஆட்டோ, அல்லது நுங்கம்பாக்கம்ல இருந்து 30ரூபாய் ஆட்டோக்கு அழுதா இங்கே வந்துடலாம்! ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஸ்பென்ஸர் போல இதுவும் ஒரு பீட்டர் இடம்... ஆனால் ஸ்பென்ஸர் மேரி பிரவுன் உணவைவிட இங்கே இருக்கும் மேரி பிரவுன் எனக்கு மிகவும் பிடிக்கும்.... ஏனா இங்கே நல்லா பொறுமையா கவனிப்பாங்க... அமைதியான அழகான இடம்.... இங்கே எனக்கு பிடித்தது சீஸ் பர்கரும், பீட்ஸாவும், சமோசா மற்றும் கட்லெட்டும்! ரொம்ப சூடாவும் சுவையாவும் இருக்கும்!

இங்கே எப்போ போனாலும் யாராவது சினிமா விஐபி பார்க்கலாம்.... நான் பிருந்தா மாஸ்டர், குஷ்பூ மற்றும் குடும்பத்தாரை இங்கே தான் பார்த்தேன்...

இங்கே காஃபிடே மிக பிரபலம்.... பல கிளைகள் இருந்தாலும் இந்த கிளை மிக பிரபலம்! எனக்கும் காஃபிக்கும் வெகு தூரம் அதுனால் இந்த பக்கம் ஒதுங்கினது இல்ல....

இது நம்ம ஏரியா:
*******************

ஹி ஹி அதாங்க திநகர்! இதைப்பற்றி உங்களுக்கு சொல்லனுமா என்ன?

சரவணா ஸ்டோர் போயி சுற்றிப்பார்த்துட்டு, சென்னை சில்க்ஸ்ல, குமரன்ல, போத்தீஸ்ல ஏதாவது ஒரு கடைல டிரெஸ் எடுத்துட்டு, அப்புறம் இரயிவேஸ்டேஷன் பக்கத்துலயே ஒரு வளையல் கடை இருக்கு அங்கே போனா எல்லாவிதமான ஃபேன்ஸீ பொருட்களும் கி்டைக்கும்... அங்கே போயி காதுக்கு வளையல், காதுக்கு செயின்(கி கி கி) எல்லாம் வாங்குவோம்!
ஆங் அப்புறம் என் கணவர் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு பின் என்னை அழைத்துச் சென்ற முதல் இடமும் இது தான்! அங்கே தான் எனக்கு விலையுயர்ந்த அழகான பரிசும் கொடுத்தார்! சோ சென்டிமென்டலாவும் எனக்குப் பிடித்த இடம்!

நுங்கம்பாக்கம்:
****************

இதுவும் என்னால் மறக்க முடியாத இரயிவே நிலையம்.... பின்னே என்னங்க காலைல 6மணி இரயிலைப் பிடித்து 7மணிக்கு நுங்கம்பாக்கம் வந்திறங்கி அங்கே இருக்கும் ஒரு பிளாட்பாரக் கடையில் சூடான சுவையான இட்லி, வடை சாப்பிட்டுவிட்டு பரபரப்பா வெளியே போயி பிடிட்ஜ தாண்டினதும் ஷேர் ஆட்டோ பிடித்து ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்படி எங்கே அவசரமா போவோம் தெரியுமா.... ஜப்பனீஸ் மொழி கற்றுக் கொள்ள வகுப்பிற்கு தான்!
அதுக்காக நான் ஜப்பானீஸ் மொழில பேசுவேனானுலாம் கேட்கப்படாது! அது பரம இரகசியம்! :)

இதுதான் எங்களோட ஃபேவரிட் ஊற் சுற்றும் இடங்கள்! :)

இது இல்லாமல் நான் சென்று மகிழ்ந்த அழகான எனக்கும் பிடித்தமான இடங்கள் பெசண்ட் நகர் வழியே நாங்க போன முருகன் இட்லி கடை, பிட்ஸா ஹட், மேரி பிரவுன், சரவண பவன், மெரினா பீச், திநகர், அண்ணா நகர் முழுவதும், சத்யம் தியேட்டர் (இது மட்டும் போனதில்ல) , மாயாஜால், மைலாப்பூர் கோயில், தாம்பரம் கோயில், நுங்கம்பாக்கம் இட்லி கடை, தாம்பரம் வஸந்தபவன் இப்படிப் பல இடங்கள்.... (என்ன ஒரே ஹோட்டல்களாக இருக்கேனு என் சாப்பாட்டு விஷயத்தை பற்றிலாம் யோசிக்கப்பிடாது ஆமாம் சொல்லிட்டேன்) !

அப்புறம் எங்கள் கல்லூரியை சுற்றி இருக்கும் கடைகளுக்கு போவோம்... ஜூஸ் குடிப்போம்....

இப்படியாக எழும்பூர் இரயில் நிலையமும் அங்கு தொடங்கிய என் சென்னைக் காதலும் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது! இப்படி என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான தருணங்களை அதிகம் பார்த்த சென்னையின் பிறந்தநாளுக்கு என்னுடைய காலம் தாழ்ந்த வாழ்த்தும், நன்றி கூர்ந்து பதிவிட இந்த மொக்கை பதிவும்! :)

சென்னை வாழ்க!மெரினா பீச் வாழ்க!

August 27, 2009

கலக்கல் பொழிலன்!

பொழில் குட்டி வர வர ரொம்ப செல்ல கலாட்டா பண்றான்.... சேட்டை பண்றது அவன் தான் ஆனால் அடி மட்டும் எங்களுக்கு :( அவ்வ்வ்வ்வ் அடிப்பது வேறும் யாரும் இல்லை பொழிலன் தான்.... ஒரு அடிக்கு இரண்டு மூன்று கிள்ளுகள், பிராண்டல்கள் இலவசம்! :)

************************************************

கஷ்ஷ்ஷ்டப்பட்டு வளர்த்த கூந்தல் எல்லாம் பொழிலன் கையில சிக்கி சின்னாபின்னமாகி அல்லோலப்படுது! இதுல வேற பொழிலன் அப்பா டயலாக் ஒரு சமயம் என் முடிய பார்த்திட்டு " பரவால நீ முடி நிறைய தான் வெச்சிருக்கே நம்ம குழந்தை பிறந்ததும் புடிச்சு இழுத்து விளையாட " அவ்வ்வ்வ் அவன் இழுத்தா விளையாடுறான்? நோ நோ........ பிய்த்துல விளையாடுறான்....

அன்று ஒரு நாள் இப்படித் தான் நான் இட்லி சாப்பிட்டுக்கிட்டே தொலைக்காட்சி பார்த்துட்டு இருந்தேன்... அப்போ இங்கே அங்கே நடமாடிக்கொண்டு இருந்த நம்ம சார் அதாங்க மிஸ்டர்.பொழிலன் நேரா என் கிட்ட வந்து என் இட்லி தட்டைப் பிடித்து இழுக்க நான் இழுக்க ஒரு வழியா நான் வெற்றி எனக்கு.... ஆனால் அதற்குள்ளே டிவில ஒரு எண்ணெய் விளம்பரம் அதுல இரண்டு வடை காமிச்சாங்க...

வடை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு நான் டிவியில வடைய பார்க்கத் திரும்பினா என் தட்டு பொழிலன் கையில.... என் இட்லி தரைல.... உடனே வடைய காட்டுவதற்கு முன்னாடியே நான் பொழிலன் பக்கம் திரும்ப என் இட்லி தரைல.... அதுக்குள்ள வடையும் போச்சு :( அய்யோ வடை போச்சே அதோட இட்லியும் போச்சே!

***********************************************

இப்போது எல்லாரையும் உம்பா என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறான்.... பின்ன நாங்க அவனை பல செல்லப் பெயர்களில் கொஞ்சும் போது அவன் எல்லாருக்கும் ஒரு செல்லபெயர் வைத்திருக்கிறான்! :)

உம்பா உக்கார்(உட்காரு), உம்பா வேணாம் உம்பா, உம்பா இயா பா ( மியாவ்கு பால்) , உம்பா பாட்டில், அய்யா பாஆஆஆ ( பாய் சொல்கிறான்) , உம்பா தா தா தா இவையெல்லாம் அவன் இப்போது தொடர்ச்சியாக பேசும் வரிகள்!

என்னை அம்மானும், உம்பானும் கூப்பிடுவது போலவே எல்லாரையும் அந்தந்த உறவு முறை அல்லது உம்பா என்று அழைக்கிறான்.... :)

***********************************************

எந்த எந்த பொருளை எதற்காக எப்படி பயன்படுத்தனும்னு நல்லாவே தெரியுது! சீப்பினை எடுத்த தலை வாறுவது போல செய்கிறான், கரண்டி,ஸ்பூன் எடுத்தால் கூடவே கிண்ணம் எடுத்துக் கொண்டு ஏதோ சாப்பிடுவது போல செய்கிறான்! புத்தகங்களைப் பார்த்தால் ஒன்றை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக ஏதோ படிக்கிறான்.... புத்தகம் தலைகீழாக இருந்தாலும் குழந்தை பொறுப்பாக படிக்கும் அவன் படிப்பது என்னனு அவனுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும்! :)

பொறுப்பான பிள்ளை துடைப்பத்தை பார்த்தாலே எடுத்து வீடு பெருக்குகிறான்... அதை தூக்க முடியாமல் தூக்கி பெருக்குவது கொள்ளை அழகு! ஆனால் அவன் அதில் பாதி உயரம் தான்!

காலையில் நான் கிச்சனில் அமர்ந்து காய்கள் வெட்டிக் கொண்டிருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து கொண்டு நான் வெட்டும் காயெல்லாம் எடுத்து தூக்கி வீசிக் கொண்டிருப்பான்!

***********************************************

அவனுக்கு என்ன சாப்பிடக் கொடுத்தாலும் மியாவ்கும், காகாவிற்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்பான் அவன் மழலையில்.... இயா தா... (மியாவ்கு தா)!

வர வர ஒழுங்காக சாப்பிடுவது இல்லை.... சாப்பாட்டினை தானே உண்ண வேண்டும் என்று கிண்ணத்தோடு வாங்கிக் கொள்வான்... பின் அதனை கீழே சிந்தி மேலே சிந்தி கடைசியில் வயிற்றுக்குள் ஒன்றும் போகாது :(

*********************************************

ஆனால் எல்லாவற்றிற்கும் அழுது, கத்தி, அடம் பிடித்து சாதிக்கும் குணத்தை எப்படி மாற்றுவது? இன்னும் வளர்ந்த பின்பு இப்படி செய்தால் தகாது அதனால் இந்தக் கால குழந்தைகளின் பிடிவாதத்தை மாற்றும் சிறந்த வழி அறிந்தோர் கூறுங்கள்! நாங்கள் அனைவரும் பலவாறு முயற்ச்சித்து வெற்றிகரமாக தோல்வியடைந்தோம்! :(

************************************************

ஆனால் அவனுடனான தருணங்கள் இன்பத்திற்கு குறைவில்லாத இரசனைகள் நிறைந்த தருணங்கள்! அவன் மீதான என் இரசனைகளுக்கு வயதே ஆகாது (பொழிலனுக்கே வயதானாலும்) ! :) அவனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் ஆனால் அப்புறம் இடம் இருக்காது மற்றும் படிப்பவர்களின் பொறுமை கருதி இதோடு இன்று நிறுத்திக் கொள்கிறேன்!

*************************************************

இரத்தக் கண்ணீரே வந்துவிடும் போல

இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித் தாளில் படித்த செய்தி... இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே தாயால் துணியில் கட்டி பையில் போடப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு கடைசியில் துணிப் பையிலேயே.... அய்யோ சொல்லவே கண் கலங்குது.... இரண்டு பிஞ்சும் படைத்த கடவுளிடமே போய்ட்டாங்க.... பாவம் தாய் வயிற்றில் இருக்கப்போ இந்த உலகத்தைப் பற்றி எப்படியெல்லாம் நினைத்திருக்கும் இரு பிஞ்சுகளும்...

எப்படி இப்படியெல்லாம் செய்ய மனம் வருது பெற்ற தாய்க்கே? இரத்தக் கண்ணீரே வருகிறது :(

நேற்றும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விஷயம் இது போலத் தான் அசுத்த நீர் ஓடு சாக்கடையில் வீசப்பட்டக் குழந்தை.... கடவுளே குழந்தையை வேண்டம்னு முடிவு பண்ணவங்க.... அதுங்க உயிர்வாழவே முடியாதபடி ஏன் சாக்கடைகளிலும், கண்ட இடங்களிலும் வீசுறாங்க? தொட்டில் குழந்தை திட்டம், தொண்டு நிறுவனம், ஆசிரமம் இப்படி எங்கேயாவது விடலாமே?

இல்லையென்றால் குழந்தை இல்லாத எத்துணையோ பேர் குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்க அவர்களிடம் கொடுக்கலாம்.... அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இப்படி?

சுய விருப்பம் இல்லாமல் நிச்சயம் கருத்தரிக்க முடியாது... தெரிந்தே கொலை செய்யும் இந்த பெண்களை என்ன செய்வது?

ஒரு ஆணிடம் ஏமாந்தவர்கள், பெண் குழந்தை என்றால் மறுக்கும் கணவன் குடும்பத்தாருக்கு பயந்தவர்கள், தகாத காதல் மற்றும் கள்ள உறவினால் கருத்தரித்தவர்கள் இப்படி பலர் இந்த வரிசையில் பிஞ்சுகளை பலியாக்கிவிட்டுச் செல்கிறார்கள் :(

இதயெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.... அந்தப் பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஓர் உணர்வு நம்மை ஆக்கிரமிக்கிறது :(

நம்மால் ஆன உதவிகளை இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யவேண்டும்...
முடிந்தால் தத்து எடுத்து வளர்ப்போம் அல்லது அவர்களை வளர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவோம்!
இது என் பல வருடக் கனவு....

ஆனால் இப்படி தொண்டு நிறுவனம் இருக்கும் தைரியத்தில் தான் இந்த கல் நெஞ்சம் படைத்தவர்கள் குழந்தைகளை இப்படி வீசுகிறார்கள்!

தாயன்புக்கு ஏங்கி உறவுகள் இன்றி வாழும் அந்தக் குழந்தைகள் மனதில் எத்தகைய காயம் உருவாகும் :( என்ன தான் நாம் உதவினாலும் தாய் தரும் அன்புக்கு ஈடாகுமா? என்று மாறுமோ இந்த நிலை!

மெளனம்


மெளனமான என் இரவொன்றில்


எனக்கான உன் நினைவுகள்


காற்றின் வழி செல்கையிலே


அது உன்னை அடைந்ததோ


அல்லது பொழுது விடிந்ததோ!


காற்றோடு பயணித்தாலும் அது


காற்றினும் விரைவாக வருகையில்


என் மனமோ மெளனமாக


உன் மனதின் வசமாக


உன் நினைவுகளோ


நம் நினைவுகளாய்


என்னை வந்தடைய


இது காதலோ நட்போ


இரண்டும் கடந்த உறவோ


என் மனதைக் கேட்டேன்


மெளனமான என் மனதோடு


உரையாடும் உன் மனம்


சொன்னது என்னிடம்


இது நமக்கான..............





August 19, 2009

முன்னேறும் இந்தியத் திருநாட்டின் அதிர்ச்சியான மறுபக்கம்

நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சந்தேகத்துடன் கூறுவேன்.... ஒரு புறம் முன்னேறும் காட்சிகள் பல அரங்கேறிக் கொண்டிருந்தாலும் நம் தாய் நாட்டின் மறுபக்கம் :(

நம் அம்மா பார்ப்பதற்கு அழகாக பட்டாடை, நகையெல்லாம் உடுத்திக் கொண்டு அழகுக்கு அழகு சேர்த்து படாடோபமாக இருந்தால் அவர் மகிழ்ச்சியாக வளமாக வாழ்கிறார் என்று கூறிவிடலாமா? அவர் மனதிலும் எந்தக் குறைகளன்றி உண்ண உணவிலும் எந்தக் குறையுமின்றி நோய் ஏதுமின்றி இருந்தால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக அவளமோடு வாழ்கிறார் என்று கூறுவோம்....

பின் நம் தாய் நாட்டினைப் பற்றி மட்டும் ஏன் அப்படி முன்னேறிய பக்கத்தை மட்டும் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறோம் என்று தெரியவில்லை!

இதன் மறுபக்கம்.... இன்னும் குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை அல்லது வரதட்சனைக் கொடுமை செய்வதாக பொய் புகார் அளித்து கணவர் குடும்பத்தைப் பழிவாங்குதல், நோய்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லமாட்டேன் குறைவாக இருக்கிறது... இப்படி எத்தணையோ நிகழ்கிறது நம்மை சுற்றி!

படித்த மேல் தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தினரை மட்டும் பார்த்து, "இல்லை இப்படியெல்லாம் இப்போது நடப்பதே இல்லை" என்று கூறிவிட முடியாது! நான் கூறும் நிகழ்வுகளை படித்துவிட்டு சொல்லுங்கள்...

நிகழ்வு 1

அன்று ஒரு நாள் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு கிராமத்தின் குழந்தைகள் அனைவருமே பொன்னுக்குவீங்கி என்னும் ஒரு வித அம்மை தொற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்... ஆனால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இன்னும் பலருக்கும் நகரத்திலேயே உருவாக நிலையில் கிராம மக்களைப் பற்றி என்ன சொல்வது... நகரத்தில் தங்க நகை அணிவித்து இந்த நோயைக் குணப்படுத்துவதாக எண்ணி மருத்துவ ஆலோசனை பெறாமல் அது தானாகவே சரியாகிவிடும்... இதை நானே பல இடங்களில் நேரில் பார்த்திருக்கிறேன்...

அது கிராமம் அல்லவா அதனால் தான் மக்கள் ஒரு படி மேலே போய் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த நோய் வந்தால் உடனடியாக தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கத்தினாலான திருமாங்கல்யத்தைப் போடுகிறார்கள்.... இது கேட்பதற்கே கேவலமாக இருக்கிறது...

அங்கு ஓடு அசுத்தமான சாக்கடை நீரே இதற்கு காரணம்... சுகாதார நிலையத்திற்குச் சென்று நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் இப்படி நடப்பதும் நம் இந்தியாவில் தான்! :(

நிகழ்வு 2

சாலைகளில் அழகான விளக்குகள் அமைத்து, சாலையோரச் சுவர்களில் அழகான படங்கள் வரைவது மிகவும் நல்ல விஷயம் தான்! ஆனால் அதற்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை குடிசைமாற்று வாரியத்திற்கு ஒதுக்கி இன்னும் சென்னை "மா"நகரின் பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடம் ஏற்படுத்தித் தரலாமே?

அவர்கள் இருப்பிடத்தைவிட்டு மீண்டும் பிளாட்பாரத்திற்கு வந்தால் (அப்படியும் நடக்கிறது ) கடுமையான தண்டனைகளை விதிக்கலாம்!

அண்ணா நகரில் டவர் பூங்காவிற்கு அருகில் செல்லும் தெருவில் கூட நான் இத்தகைய பிளாட்பாரவாசிகளைப் பார்த்திருக்கிறேன்!

நிகழ்வு 3

நம் நாட்டில் செய்வதற்கு ஆயிரம் வேலை இருக்கிறது... சுய தொழில் இருக்கிறது... பின் ஏன் வேலைவெட்டியில்லாதவர்களும் , போலிச் சாமியார்களும் (இதுவும் ஒரு சுய தொழிலோ? ) , பேயோட்டும் மந்திரவாதிகளும் என்று தெரியவில்லை.... பின் எப்படி நாடு சுத்தமாக அழகாக மாறும்?

சோம்பேறித் தனத்தை மறைக்க சாமியார் வேடம் ஒரு வழியா? அதிலும் கருப்பசாமி தன் காலில் விழுந்து கெஞ்சியதாம் தன் மகள் உடம்பில் வசிக்க அதனால் தானும் ஒத்துக் கொண்டாராம்.... இப்படி கூறும் ஒரு மனிதர் தன்னை காளி அன்னை என்றும் கூறிக் கொள்கிறார்.... தகவல் உபயம் விஜய் டிவிக்கு நன்றி!

இதெல்லாம் ஒரு பிழைப்பா? அதிலும் கருப்புசாமி வந்ததும் அப்பெண் மது குடிக்கிறார், பீடி, சுருட்டு புகைக்கிறார், கஞ்சா அடிக்கிறார்... சீ இதெல்லாம் கேவலமாக இல்லை.... தெய்வத்தை, பெண்மையை, நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் இவர்களை விடுத்து எப்போது பார்த்தாலும் இந்த ஐடி பெண்கள் அட்டகாசம் செய்கின்றனர், ஐடி மக்கள் குடிக்கின்றனர், அப்படி செய்றாங்க, இப்படி போறாங்க, இவங்களால கலாச்சாரம் கெடுது அது இது என்று ஐடி மக்களை குறை கூறுவதே பொறாமை பிடித்த பல மக்களின் வேலையாகப் போயிற்று!

இதில் உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால் அந்த பெண் சட்டத்தினால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா அடிப்பதைக் கூட வெளிபடையாகக் கூறுகிறார், "நீங்கள் தவறுனா நினைச்சாலும் பரவால எனக்கும் அது தவறுனு தெரியும் ஆனா கருப்புதான் கஞ்சா அடிக்கிறார் "
என்று வேறு நாக்கூசாமல் சொல்கிறார்...

ஏங்க இப்படி தெய்வம் மனிதனுக்குள்ள வந்து எல்லா காரியங்களும் செய்தா நமக்கு எதுக்கு படிப்பு, வேலை? எல்லாத்தையும் தெய்வம் பார்த்துக் கொள்ளாதா? கடவுள் வழிதான் காட்டுவார் நாம தான் அதை கடவுள் கொடுத்த மூளையை வைத்து நல்லவிதமா நமக்கும் பிறருக்கும் பயன்படும் விதமா அமைத்து வாழ்க்கையை உயர்த்திக்கனும்.... அதை விட்டுட்டு , எல்லாருக்கு எப்போதும் நன்மை செய்யக் கூடிய கடவுள் மேல் பழிபோட்டு இப்படி தீய காரியங்கள் செய்யலாமா?

இந்த நிகழ்வுகளையெல்லாம் படித்த பிறகு என்ன தோன்றுகிறது நமக்கு.... நம் நாட்டில் மாற வேண்டியது பல உள்ளன... மக்களுக்காக மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் தாராளம்.... அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளும் அதற்கு நம் ஒத்துழைப்பும் ஏராளம் தேவை... நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு ஆகா இந்தியா எங்கோ போகிறது என்று பேசி பெருமைக் கொள்வதில் தவறில்லை ஆனால் இன்னும் நல்லவிதமாக முன்னேற நம் கடமைகளை இனியாவது செம்மையாக ஆற்றுவோம்...

சுதந்திர தினத்தன்று மட்டும் நாட்டுப்பற்று வந்து என்ன பயன்? நாட்டுப்பற்றினை நாள்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டலாம்! முயற்சிப்போமே!






August 13, 2009

கிருஷ்ண ஜெயந்தியும் எங்கள் குட்டிக் கண்ணனும்
















இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு எங்கள் குட்டிக் கண்ணன் என் புகுந்தவீட்டிலும் சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு என் பிறந்த வீட்டிலும் இருந்தான்!

புகைப்படங்களை பார்த்து நீங்களே சென்ற வருட கண்ணனையும் இந்த வருட கண்ணனையும் கண்டுபிடியுங்கள்! :)

பொழிலனின் கிருஷ்ணலீலை எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது! :)

August 9, 2009

பப்புவின் கதையும் பொழிலனும்!

சந்தனமுல்லை தன் மகள் பப்புவின் கதையை அவள் குரலிலேயே பதிவு செய்து நமக்காக சித்திரக்கூடத்தில் பதித்திருந்தார்! நான் பொழிலனை பப்புவின் கதையை கேட்க வைத்தேன்!

பொழிலன் கதை கேட்டுக் கொண்டே பப்புவிற்கு ஏதேதோ அவன் மழலை மொழியில் பதில் சொல்கிறான் :) கேட்பதற்கு இனிமையாக இருந்தது!

ஸ்பீக்கர் அருகே போய் அமர்ந்து கொண்டு பப்புவின் கதையைக் கேட்டான்! :)

நன்றி பப்பு! நன்றி முல்லை! பொழிலனுக்கு மழலைக் குரலில் கதை சொன்னதற்காக..... :)

August 5, 2009

தாய்ப்பால் வார பதிவு!



பாலூட்டும் அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கு இந்த உலகத்தாய்ப்பால் வாரதிற்கான எனது வாழ்த்துகள்!


தாய்ப்பால் என்பது இறைவன் அளித்த வரம் நமக்கு! அதனை வீணாக்காமல் குழந்தைக்கு அளித்து நமக்கும் நம் குழந்தைக்குமான அன்யோன்யத்தை அதிகரிப்பதோடு நம் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்பிற்கும் ஆதாரம் அளிப்போம்!


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்......

August 3, 2009

பொழிலனும் சேட்டைகளும்!

பொழிலன் வளர வளர சேட்டைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.... கூடவே அவன் மீதான என் ரசனைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது!

இப்போதெல்லாம் அதிகம் கோவமும் பிடிவாதமும் பொழிலனின் ஆயுதங்கள்! ஒரே கத்தல்தான்..... அவன் வாயருகே நம் காது இருந்தால் போச்சு... தலை சுற்றி கொஞ்ச நேரம் காதில் "ஒய்ங்" என்ற ரீங்காரம் கேட்கும் :(

ஆனால் எங்கள் பிள்ளை அதிபுத்திசாலி.... ஹி ஹி ஹி எல்லா அம்மாவுமே இப்படித் தான் சொல்வாங்க.... ஆனால் அடுத்து நான் சொல்லப் போவதை கேளுங்கள் பின்பு நீங்களே அப்படி சொல்வீங்க!

வெளியே பூனை நடமாட்டம் கண்டதுமே "இயா வா இயா வா" என்று அழைத்து எங்களிடம் ஃபிரிட்ஜைக் காட்டுவான்.... எதற்கென்றால் என் அத்தை எப்போதும் பூனைகளுக்காக ஃபிரிட்ஜில் மீன்கள் வைத்திருப்பார்.... அதை எடுத்து பூனைக்கு போடுவதை பார்த்த பொழிலன் அன்று முதல் பூனைகளைக் கண்டால் எங்களுக்கு ஆர்டர் போடுகிறான் மேற்கண்டவாறு.... பின்பு அதற்கு பால் ஊற்ற வேண்டும்... அதற்கு "அம்மா பா இயா வா அம்மா பா" என்று என்னிடம் பூனைக்கு பால் ஊற்றும்படி கேட்பான்!

இயா வா என்பது மியாவ் வா என்பதின் மழலை திரிபு! :)

இந்த அம்மா என்பது சில சமயங்களில் அம்மா அப்பா இருவரையும் இணைத்து "அம்பா"" என்று வரும்.... அம்பாவும் நான் தான்! :)

டப்பாக்களை திறக்கக் கற்றுக் கொண்டுவிட்டான்.... அதனால் கையில் கிடைக்கும் டப்பா, தண்ணீர் பாட்டில் எல்லாவற்றையும் திறந்து மூடுவது ஒரு விளையாட்டு அவனுக்கு!

பால் கலக்குவதைப் பார்த்தால் அவனும் கலக்க வேண்டும்... அடுத்த வினாடி அவன் அலறல் கேட்கும் முன் அவன் கையில் ஒரு காலி டம்ளர் மற்றும் ஸ்பூன்! :)

எல்லாவற்றையும் அவனே தன்னிச்சையாக செய்யவிரும்புகிறான்! இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளதெனினும் இன்னும் அவன் வளர வேண்டும்!
தலை அவனே வாரிக்கொள்வதாக நினைத்து அவனது குட்டி சீப்பினை வைத்து முடியைக் கலைத்துக் கொள்வான்! இது போல் சின்ன சின்ன விஷயங்கள் அவனுக்கு சில மாதங்களில் நன்கு பழகிவிடும் என்று நினைக்கிறேன்! நான் எம்பிராய்டரி போடுவதைப் பார்த்து அவனும் கேட்பதால் அவன் தூங்கும் போது அதனை செய்கிறேன்!

ஆனால் சிக்கலான சமாளிக்க முடியாத விஷயம் அவனுக்காக ஸ்பெஷலாக தயார் செய்யப்பட்ட உணவினை விட நாங்கள் உண்பதை பிடிவாதமாகக் கேட்பது தான்! தரவில்லை என்றால் அழுகை வேறு! :(

மற்றபடி அலமாரித் துணிகளை அவன் களைப்பதும் நான் அடுக்குவதும், செய்திதாளை அவன் கிழிப்பதும் நான் குப்பைப் பொறுக்குவதும் இனிமையான அனுபவங்கள்! :)

அவனுடைய நான்கு பற்கள் தெரியும் படி அவன் சிரிக்கும் அந்த அழகான சிரிப்பில் தான் என் உயிர் இருக்கும் கூட்டின் முகவரி தெரிகிறது! :)

கடவுளும், காதலும் காதலின் நகலாய் அமையும் குழந்தையின் சிரிப்பில் தான் தெளிவாகத் தெரிகிறது!

July 29, 2009

என்னதான் சொல்லவராங்க!

இந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் பல புதுமையாக இரசிக்கும் படி இருந்தாலும் இன்னும் பல விளம்பரங்கள் முகம் சுழிக்கும் படியாகவும், ஒரு அர்த்தமிள்ளாததாகவும் வெறுமனே மக்களைக் கவருவதை மட்டுமே கொண்டும் அமைக்கப்படுகின்றன!



அதிர்ஷ்டம் வருதய்யா:



ஏற்கனவே விளம்பரங்களை நான் துவைத்திருக்கிறேன! இது ஒரு அதிர்ஷ்டக் கல் பற்றிய விளம்பரம்! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சி காட்டுகிறார்கள்.... அதில் ஒரு காட்சி... அந்தக் கடையின் அதிர்ஷ்டக்கல்லை அணிந்த ஒரு சோம்பேறிக்கு(அதிர்ஷ்டக் கல்லை நம்பி தன்னம்பிக்கையை இழப்பவனை எப்படி சொல்வது?) நடு ரோட்டில் ரொக்கப் பணமாக ஒரு கட்டுக் கிடைக்கிறது! ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.... என்னதான் சொல்லவராங்க? இப்போ புரியுதாங்க நான் ஏன் சோம்பேறினு சொன்னேனு?



இதெல்லாம் ஒரு விளம்பரமா? உழைப்பின் மீதான நம்பிக்கையை விட அதிர்ஷ்டம் பெரியது என்றால் ஏன் நாமெல்லாம் விரும்பி வருந்தி உழைக்க வேண்டும்? பேசாமல் எல்லோரும் ஆளுக்கொரு அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டுக் கொள்வோம்! என்ன சொல்றீங்க?

பொழிலன் ஆல்பம்








பொழில்குட்டிக்கு பிறந்தநாள் விழாவில் வந்த பரிசுப்பொருட்கள் அத்துணையும் மிக அருமை! ஒவ்வொன்றும் ஒரு விதம்!

இப்போதிருந்து 4வயது வரை உபயோகப்படுத்தும் படியான உபயோகமான பரிசுகள்!

அதில் அவன் தற்சமயம் பயன்படுத்துவது அவனுடைய கிடாரையும் காரையும்தான்!

ஆனால் கார் முன்புறமாகச் செல்லாது பின்னோக்கிதான் செல்லும் ஏனென்றால் ஓட்டுனர் பொழிலன் பின் பக்கமானதான் ஓட்டுகிறார்! :)

அவருக்கு இரண்டு நாட்கள் பிறந்தநாள் கொண்டாடினோம்! உறவினர்களுக்காக அவர்களின் அன்பு விருப்பத்திற்கிணங்க... இந்த படங்கள் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்தவை! :)
கார்:
நானும் என் மாமனாரும் எங்கே பொழிலன் காரில் இருந்து விழுந்துவிடுவானோ என்ற பயத்தில் அவனைப் பிடித்திருக்க அவனோ தைரியமாக வண்டியை பின்னோக்கிக் கிளப்பிவிட்டான்!
கிடார்:
பொழிலன் கிடார் வாசிக்கும் இசைமழையில் நனைந்து கொண்டே எடுத்த புகைப்படம் மூன்றாவது! அவனுடன் இருப்பது என் அப்பா!
பிரணவ்:
இரண்டாவது படத்தில் என் பெரியமாமியாரின் கைக்குள் நின்று அவர் உதவியோடு கைதட்டுவது என் நாத்தனார் மகன் பிரணவ்! அழகான அருமையான வாலு! அழகாக கதைகள் சொல்வான் மழலை மொழியில்! அவனுக்கு இப்போது இரண்டரை வயது ஆகிறது! இப்போதே அழகாக எல்லோரின் பெயரையும் உறவுமுறையையும் மிகத் தெளிவாகச் சொல்கிறான்!
அவ்வுளவுதாங்க.... சிறப்பான படங்கள்! மற்றதெல்லாம் எங்கள் முகத்தோடு வந்து பயமுறுத்தும்! :))


July 24, 2009

மீண்டும் பள்ளிக்கு போகலாம் - தொடர் பதிவு!

"எதைச்சொல்ல" என்னும் பதிவில் தன்னுடைய பள்ளி அனுபவங்களை ஒரு அழகான கவிதையாக வடித்த "ஜோதி" அவர்களின் அழைப்பினை ஏற்று நானும் என் பள்ளி அனுபவங்களை ரொம்ப மொக்கை போடாமல் சுருக்கமாக சொல்கிறேன்! ஹி ஹி ஹி அவர் மாதிரி கவிதையெல்லாம் இல்லை வழக்கம் போல நம்ம ஸ்டைல் தான்!


******************************************

என்னுடையா பள்ளி வாழ்க்கை மிகவும் அருமையானது தான் பெரும்பாலானோரைப் போலவே! பாலர் பள்ளியில் படிக்கும்(??!! விளையாடும்) போதே ஞாயிறுகளில் கூட அம்மா கூலுக்கு அம்மா கூலுக்கு என்று என் பிஸ்கட் பாக்ஸ் எடுத்துக் கொண்டு கிளம்புவேனாம்! என் அம்மா இன்றும் கூறி சிலாகித்துக் கொள்வார்!



உண்மையில் எனக்கு பள்ளி செல்வதும் சரி கல்லூரி செல்வதும் சரி மிகவும் பிடித்தமானதாக இருந்தது! திருச்சியில் தான் பள்ளிக் கல்வி எனக்கு! படிப்பதற்கு ஏற்ற அருமையான நகரத்தில் அருமையான பள்ளியில் துவங்கிய என் அறிவுத் தேடல் இன்றும் கூகுளில் தொடர்கிறது! பின்ன மண்டையில அறிவு எங்கே ஏறுது! ஹி ஹி ஹி!

******************************************

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரில் சிலரை இன்றும் நன்றியுணர்ச்சியோடு மனதில் வணங்கிக் கொள்கிறேன்! ஆனால் ஒன்று நன்கு பாடம் நடத்தி எங்களையும் அன்போடு காணும் ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு என் மனதில் மதிப்பு உண்டோ அந்த அளவுக்கு ஒன்றும் சொல்லித் தராத(தெரிந்தால் தானே?) ஆசிரியர்கள் மீது வெறுப்பும் இருக்கும் எனக்கு!



என்னுடைய நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியவர்! என்னுடைய முதலாம் வகுப்பிலிருந்தே வருடந்தோறும் முதல் மாணவியாக பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வாங்கும் நான் ஆறாம் வகுப்பில் தான் கொஞ்சம் பின் தங்கி்னேன்! புதிய பள்ளி... புதிய சூழல், புதிய நட்பு என எல்லாமே புதுசு!



பின் ஏழாம் வகுப்பில் விட்டதைப் பிடித்துவிட்டேன்! 7ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து மீண்டும் முதல்/இரண்டாவது/மூன்றாவது மாணவிப் பரிசை வாங்கத் துவங்கிவிட்டேன் வருடந்தோறும்!

*****************************************

எங்கள் பள்ளியில் எப்போதும் போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்!
என் சொந்த விருப்பத்தினால் முடிந்த வரை அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுத்து அதிக பல்புகளும் சில பரிசுகளும் வாங்குவேன்!


பல்பு பொதுவாக தனி நடிப்பு, பாட்டுப் போட்டி இரண்டிலும் ரெடியாக இருக்கும் எனக்கென! பரிசும் தமிழ், ஆங்கில மொழிகள் இரண்டிலும் கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு தயாராக இருக்கும்! மற்றபடி பல பல பல்புகள் போட்டி மற்றும் போட்டியாளர்களைப் பொறுத்து சூப்பரா கிடைக்கும்! அரசியல்னா இதெல்லாம் ஜகஜம்! பல்புக்கெல்லாம் கவலைப் பட்டா எப்புடி?

ஆனால் பொதுஅறிவு வினாடிவினா, அறிவியல் வினாடிவினா, அறிவியல் ஆய்வுக்களம் மற்றுமாய்வுக் கட்டுரை போட்டிகளில் படிப்படியாக முன்னேறி தொடர்ந்து மூன்று வருடங்கள் மாநில அளவில் எங்கள் குழு பரிசுகள் வாங்கினோம்! அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று!

அறிவியல் வினாடிவினா தான் அருமை.... சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி? புத்தகத்தில் இருப்பது போன்ற கேள்விகள் தான் வரும்.... சுஜாதா போன்று பலர் அத்தகைய அறிவியல் விளக்க கேள்வி பதில் புத்தகங்களை எழுதியுள்ளனர்.... அவையெல்லாம் தான் கைகொடுத்துதவின! இவை குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமான புத்தகங்கள்! (நான் இப்போ ஒரு அம்மா எனும் நினைவு வந்துவிட்டதோ??)


ஆனால் எனக்கு ஓட்டப்பந்தயம்னா எப்பவும் பயம்! எங்கள் பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் இது! அப்போதெல்லாம் எனக்கு காய்ச்சல், வயிற்று வளி, கால் வலி போன்றவை வந்துவிடும் ஒரு கொஞ்ச நேரத்திற்கு! பின்ன என்ன சிறு பிள்ளையில் ஓடி ஓடி நிறைய விழுப்புண்கள் பெற்று அப்பா டின்சர் வைத்த அனுபவம் தான்! பலர் முன் ஏற்படும் தோல்வியின் மீதிருந்த பயமும் ஒரு காரணம்!

******************************************

பத்தாம் வகுப்பு வரை எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!

பதினோராம் வகுப்பில் தான் அந்த கெமிஸ்டிரி மிஸ் :( என்ன கொடுமை கெமிஸ்டிரி இது? வகுப்பில் அந்த அம்மா செய்யும் உருப்படியான ஒரே காரியம் டெஸ்ட்! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கெமிஸ்டிரி டெஸ்ட்!!!


அப்பாடா ஒரு வழியா டியூசன் வைத்து கெமிஸ்டிரியில் தேறியாச்சு! ஆனால் கணிதம்.... ஸ்ஸ்ஸ்ஸ் முடியல அந்த மிஸ் எல்லாத்தையும் டியூசன்ல தான் சொல்லிக்குடுப்பாங்க... வகுப்பில் நாங்களே தான் அவரிடம் டியூசன் போவோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்! :( கணக்குனாலே கசப்புதான் அப்போ! அது இன்னுமற்றபடி இயற்பியல், உயிரியல் பாடங்கள் அதி அற்புதம்! தமிழும் ஆங்கிலமும் அல்வா மாதிரி இனிப்பு!

*****************************************

ஆனால் பள்ளிப் பருவத்தில் அழகான அவஸ்தை பாவாடை தாவணி!! எங்காள் பள்ளி சீருடை!


இப்படி வழக்கமான பள்ளி அனுபவம் தான் எனினும் என்னை செம்மை படுத்திய, என் மனதை ஒரு நிலைப் படுத்திய ஒரு அற்புதமான பள்ளி நான் படித்தது! ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தபோவனத்தைச் சார்ந்த பள்ளி ஆதலால் நான் விவேகானந்தர் ரசிகை!



அதிக பட்ச இதிகாசக் கதைகளையும், தெய்வீகப் படைப்புகளையும் படிப்பதும் கீதை சுலோகங்களைப் பாடுவதும் எனக்கும் மிகவும் எளிதானதாக இருந்தது! பாடத சுலோகங்களும் அந்தாதிகளும் மிகக் குறைவு என்னும் அளவிற்கு எங்களுக்கு அவற்றை போதித்ததோடு, அன்பு, பண்பு, பக்தி, கடமை, ஒழுக்கம், மரியாதை, பணிவு, உதவுதல் என அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கு போதித்த அருமையான கோயில் எங்கள் பள்ளி!

ஆனால் இதையெல்லாம் நாங்க கடைப்பிடிக்கிறோமானு சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்...

இப்படி ஒரு சொர்க்க அனுபவம் வேறு ஒரு பள்ளியில் எனக்கு கிடைத்திருக்குமா தெரியவில்லை! அந்த வகையில் இறைவனுக்கு நன்றி!


*****************************************
இன்று என்னிடம் இருக்கும் தவறான பண்புகளுக்கு எப்படி நான் மட்டும் காரணமோ அப்படித்தான் என் நற்பண்புகளுக்கு என் பெற்றோரும், பள்ளியும், இறைவனும், திருக்குறளுமே காரணம்!

*****************************************

மனசாட்சி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடிச்சிட்டியா சுபா? பள்ளி பற்றி ஏதோ எழுதுனு ஒரு அப்பாவி சொன்னாருனு இப்படியா எழுதுவ... விட்ட பகுதி ஒன்று இரண்டுனு எழுதுவே போலிருக்கே?

July 21, 2009

சுவாரசிய வலைப்பதிவு விருது!


இந்த விருதினை தொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கும், எனக்கு இவ்விருதினை வழங்கிய ஜோதிக்கும் என் நன்றிகள்!


நான் பெற்ற இவ்விருதினை எத்தனை பேருக்குதான் பகிட்ந்தளிப்பது...

நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பதிவுகள் ஏராளம், அதில் பலரை பின் தொடர்கிறேன் பலரை பின் தொடராமலேயே வாசிக்கிறேன்...

ஆனால் அனைத்துமே என்னைக் கவர்ந்த சுவாரசியமான பதிவுகள் தான் அவர்களுடைய பெரும்பான்மையான பதிவுகள்!
பொதுவாக எனக்கு நகைச்சுவைப் பதிவுகளும், குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் பதிவுகளும், கவிதைகள் மற்றும் இலக்கிய பதிவுகளும் மிகவும் பிடிக்கும், அந்த வகையில் பிரிவுக்கு ஒருவர் வீதம்
அதனால் யாருக்கெல்லாம் அளிப்பது என்ற குழப்பத்துடன் ஒரு நான்கு பேருக்கு பகிர்ந்தளிக்கிறேன்...


வானவில் வீதி கார்த்திக் - ஒரு நல்ல சுவாரசியமான யூத் ஃபுல் பதிவுகளின் இடம் இந்த வலைப்பூ

பூந்தளிர் தீஷூ - சுவாரசியமான பல ஆக்டிவிடிஸ்களை குழந்தைகளுக்காக விளக்கும் ஒரு அழகான வலைப்பூ

ஒண்ணுமில்லை ச்சும்மா அப்துல்லா - மொக்கையைக் கூட சுவாரசியமாக நகைச்சுவை உணர்வுடன் எழுதி நம்மையும் குறையாத ஆர்வத்துடன் படிக்க வைக்கும் வலைப்பூ
நிலாரசிகன் - அழகான கவிதைகளுக்கு சொந்தமான வலைப்பூ



July 20, 2009

ஒன்றாவது வயதில் பொழிலன்!

ஒரு வழியாக பொழில்குட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிவுற்றது! :)

பொழிலனின் வளர்ச்சியில் இந்த ஜூலை மாதம் அசுரவேக மாறுதல்களை உள்ளடக்கியது என்றே கூறலாம் :)

ஜூலை முதல் வாரத்தில் முளைக்க ஆரம்பித்த பல் இப்போது அவன் சிரிக்கும் போது அழகாகத் தெரிகிறது!

பல் முளைக்கிறது என்பதை எப்போது கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து அவர் ஒரு அழகு அழுகை அழுவாரே பார்க்கனும் அழகாக முகத்தையும் மூக்கையும் சுழித்து மேல் உதட்டை சற்று தூக்கி பல் தெரியும்படி ஒரு அழுகை... :) என் கண்ணே பட்டுவிடும்!

இப்போது நாம் பேசுவது மிக நன்றாகப் புரிகிறது... அவனும் ஒரு சில வார்த்தைகள் பேசுகிறான் தெளிவாக! எல்லாரையும் ஏய், இந்தா என்று அழைக்கிறான்.... வா, தா, தோசை மற்றும் விலங்குகளில் சிலவற்றின் ஆங்கிலப் பெயர்களை அரைகுறையாகக் கூறூகிறான்! மழலை இன்பம் மகத்தானது! இறைவனுக்கு நன்றி!

பொழிலம் பிறந்த நாள் பரிசுப் பொருட்களில் அவன் சித்தப்பா பரிசளித்த காரில் அமர்ந்து கொண்டு அதனை பின்னோக்கி ஓட்டிச் செல்வது காண கொள்ளை அழகு!

வீடெங்கிளும் ஒரு குட்டி அழகு செல்லம் ஓடிக் கொண்டும் நடமாடிக் கொண்டும் இருப்பது அந்த குழந்தை கிருஷ்ணனே வீட்டிற்குள் வந்தது போல மகிழ்ச்சியாக இருக்கு! :)

ஆனால் இவரோட சேட்டைகள் அபாரம்.... முடியல... கோவமும் எங்களுக்கு விழும் புரியாத மழலை திட்டும் ஹி ஹி ஹி! என்ன சொல்ல...

ரொம்ப பக்திமான் ஆகிட்டாரு பொழிலன்... எப்போது எங்கு சாமி படம் பார்த்தாலும் அப்படி சாமி கும்பிடுறான் அழகாக அந்த பிஞ்சுக் கைகளைக் கூப்பி! :)

பால் பாட்டில் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை திறந்து மூடக் கற்றுக் கொண்டபடியால் அதைப் பார்த்தாலே அந்த வேலையில் மூழ்கிவிடுகிறான்!

ஆனால் என் கைப்பேசி அவன் கையில் படும் பாடு இருக்கிறதே! :(
பல நாட்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து கிடக்கும் என் கைப்பேசி ஒரு நாள் சாப்பாட்டிற்கு அரிசி எடுத்து ஊற வைத்திருந்த குக்கரில்... :( நல்ல வேளை கைப்பேசி சோறு சமைக்காமல் போனோம்! :)

ஆனால் பொழிலன் வளர வளர மகிழ்ச்சியும் வளருகிறது! :)))

July 16, 2009

பொழிலன் பிறந்த நாள்!
















July 11, 2009

என் செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!



என் கையில் உனை ஏந்தி

உன்னில் என் உயிர் ஏத்தி

உன்

வாசமே சுவாசமாக

சுவாசமே நீயாக

உன்னையே நேசித்து

உன்னையே வாசித்து

உனக்கான எதிர்காலம்

என் கனவுகளாய்

என்றும் வேண்டுகிறேன்

இறைவனை உன் நலனுக்காக

என் அன்பு மகனே

உன் அம்மாவின் வாழ்த்துகள்

என்றும் உனதாகுக!!!


பிறந்த நாள் வாழ்த்துகள் பொழிலன்!




June 27, 2009

ஏரோபிளேன் பறக்குது பார் மேலே...

முன்பெல்லாம் வெளியே விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் நான் ஓடிச் சென்று பொழிலனுக்கு விமானம் பறக்கும் போது காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் "பொழில் குட்டிமா வா ஒடியா ஒடியா ஃபிளைட் பார்க்கலாம்" என்று அவசரமாக சொல்லிக்கொண்டே அவனை தூக்கிக் கொண்டு வேக வேகமாக வருவேன்!


"அதோ ஏரோபிளேன் பறக்குது பாரேன் " என்று காட்டுவேன்! அவனும் அழகாக பார்ப்பான்... டாடா சொல்லுவான்.... பிளைட் எங்கே போச்சுனு கேட்டா வான் நோக்கிக் கைக்காட்டுவான்.... ஆனால் நான் அவனை அவசர கதியில் தூக்கிச்சென்றதால் அவன் மனதில் உண்டான எண்ணம் எனக்கு ஒரே சிரிப்பாகிவிட்டது....


ஃபிளைட் சத்தம் கேட்டதுமே பார்ப்பதில் ஆர்வம் காட்டிய பொழிலன் சில நாட்களாக அந்த சத்தம் தொலைவில் கேட்டதுமே அழுதுகொண்டே என் அருகில் வந்து என் காலைக் கட்டிக்கொண்டு வெளியே செல்ல வேண்டுமென வெளியே நோக்கிக் கை காட்டுவான்.... முதலில் நான் கூட சரி குழந்தை ஃபிளைட் பார்க்க இவ்ளோ ஆர்வமா இருக்கானுதான் நினைத்தேன்...


அவ்வ்வ்வ்... பின்னர் தான் எனக்கு புரிந்தது ஃபிளைட் வந்தால் அம்மாவிடம் ஓடி செல்ல வேண்டும் என்றும் பின்னர் வெளியில் ஓடிச் சென்று அதனைப் பார்க்க வேண்டும் என்றும் இதனை ஒரு கட்டாய செயல் போல் எண்ணிய அவனது புரிதல்... அதாவது என் அணுகுமுறையில் ஏற்பட்ட சிறு பிழை...


எனக்கு அப்போது சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் சிந்திக்கவும் செய்து இதனைப் புரிந்து கொண்டேன் :)))


இப்போது இருவரும் சேர்ந்து எந்த அவசரமும் இன்றி பொறுமையாகவே சென்று விமானத்திற்கு டாடா சொல்கிறோம்!

யாருக்குத் தெரியும் ஒருவேளை பொழிலன் ஒரு சிறந்த விமானியாகவோ, விண்வெளி வீரனாகவோ கூட வரலாம்!!! :)))

பொழிலனும் நானும் - 4


எனக்கும் பொழிலனுக்குமான உரையாடல்கள் இப்போது அதிகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகியிருக்கிறது!

நான் வெளியில் காணும் காட்சிகள் பற்றிய என்னுடைய எண்ணங்களை ஒரு தோழனிடம் கூறுவது போல் அவனிடம் கூறுகிறேன் :) அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ குழந்தைகளின் மூளை மிகவும் கூர்மையானது என்பதை நானறிவேன்!

அவனும் ஒவ்வொரு பொருளையும் காட்டி அம்மா அது அம்மா இது என்று கேட்டுக் கொண்டே வருகிறான்! நானும் விளக்கிக் கொண்டே வருகிறேன்!

இப்போது காலிங் பெல் அடித்தால் பயந்தது போய் வீட்டிற்கு தாத்தா அல்லது வேறு யாரோ வருகிறார்கள் என்பது புரிகிறது அவனுக்கு! நாங்கள் கதவைத் திறக்கும் முன்பாகவே அவன் வந்து தயாராக நிற்பான்....

பொருட்களின் பெயர்கள் நன்கு தெரிவதால் எப்போதும் நான் அதை அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறேன்!

நானும் பொழிலனும் உப்பு மூட்டை விளையாட ஆரம்பித்துவிட்டோம்! அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.... என் வயிற்றில் சுமந்த எங்கள் குழந்தையை இப்போது என் முதுகில் சுமப்பது மகிழ்ச்சியான அனுபவம்! :))

நான் எழுதுவதைப் போலவே அவனும் எழுத விரும்புகிறான்! ஆனால் அதையெல்லாம் பழக்கிவிடவில்லை.... பிஞ்சுக் கைகளை இப்போதே சிரமத்திற்கு உள்ளாக்க விருப்பம் இல்லை.
என்னைப் போலவே அவனும் தலைவாற விரும்புகிறான்! ஆனால் அவன் வாறிவிட வி்ரும்பும் தலைமுடி என்னுடையது அவ்வ்வ்வ்வ்.....

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பது சரிதான் போல....
நான் கட்டிலில் படுத்திருக்கும் போது என் மீது ஏறி நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அதன் மீது ஏறி நிற்க முயல்கிறான்!! பயமாகத் தான் இருக்கிறது அவனுக்கல்ல எனக்கு!

வளரும் பொழிலன்!

பொழிலன் குறும்பும், பேச்சும் அதிகரித்திருக்கும் நாட்கள் இவை!

சேட்டை செய்யும் போது நாம் கண்டித்தால் திருப்பி மிரட்டுகிறானே! சிரிப்பதா? அழுவதா? :))) நடக்க ஆரம்பித்துவிட்டதால் அதிகம் வெளியில் செல்லும் முயற்சிகள் நடந்தேறிய வண்ணமும் பல நேரங்களில் அதில் வெற்றியடைதலும் நடக்கிறது!

வெளியே போகாதே என்றால் உள்ளே வந்துவிடுவான்... ஆனால் மீண்டும் சிறிது நேரத்தில் வெளியில் செல்வான்... இப்படி இருந்த பொழில்குட்டி இப்போது சில நாட்களாக உள்ளே வா என்று பலவாறு கெஞ்சினாலும் கொஞ்சினாலும் வருவதில்லை.....

அவனுக்கு இப்போது ஒன்றரை வயதில் ஒரு தோழன் வேறு அதனால் அவனுடன் வெளியில் விளையாட மிகுந்த ஆர்வம் காட்டுகிறான்!!! கடவுளே இப்போதேவா???? மகிழ்ச்சிதான் ஆனாலும் சிறு குழந்தையாயிற்றே தத்தி தத்தி நடக்கையில் எப்படி தனியே நடக்கவிடுவது??? அதனால் ஹி ஹி ஹி நானும் சேர்ந்து விளையாடப் போகிறேன் :)))

என்னை எங்கும் தனியே செல்லவிடுவதில்லை.... அவனும் உடன் வர வேண்டுமாம்.... இப்போதே என்ன பொறுப்பு தாய் மீது!!!!??? :)))) (அவன் அம்மாவுடன் இருக்க வேண்டும் தானும் டாடா போகவேண்டும் என்று அழுவதே உண்மை)

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை என் இடுப்பில் இருக்கும் நேரம் பிறரைப் பார்த்து புன்னைகைக்கும் வரை புரிந்து வைத்துள்ளான்.... ஆனால் அவனை ஆசையோடு யாரும் தூக்கினால் என்னை இறுகப் பிடித்து கொள்கிறான்! வீட்டிற்கு புதிய பெண்கள் யாரும் வந்தால் என் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறான்!

ஆனால் ஆண்கள் என்றால் மிகவும் ஒட்டிக் கொள்கிறான் அதிலும் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியமாக சேர்ந்து கொள்கிறான்! :)))
இனம் இனத்தோடு தான் சேருமோ??? :)

June 23, 2009

தூர்தர்ஷன்

இந்த தூர்தர்ஷன் என்னும் சேனல் இப்போது தடமின்றி அழிந்து வரும் நிலையில் இதன் சேவைகளைப் பற்றி நினைவு கூறவே இந்த பதிவு!


ஒரு காலத்தில் தெருவுக்கு ஒரு தொலைக்காட்சி இருந்த காலத்தில் கொடிக் கட்டிப் பறந்த இந்த சேனல் வழங்கிய நிகழ்ச்சிகள் அற்புதமானவை! பயனுள்ளவை!


இந்த அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்த வானொலி, இயந்திர மகிழுந்து, விமானம், தொலைபேசி போன்றவை பிறந்த கதைகளை தொடராக ஒளிபரப்பினர்! இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி!



இதிகாச, புராண கதைகளையும் நல்ல தரத்துடன் ஒளிபரப்பினர்! அறிவியல் நிகழ்ச்சிகள், நம் நாட்டின் முதுகெலும்பான விவசாய நிகழ்ச்சிகள், பேராசிரியர் நன்னன் அவர்களின் தமிழ் நிகழ்ச்சி என ஒரு கலக்கு கலக்கிய இந்த சேனல் இப்போது அடையாளம் இன்றி போய்விட்டது! :(


இந்திய வரலாறு பற்றிய தொடர்கள் மகான்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்கள் என பயன்களை அள்ளி அள்ளி வழங்கியது! இன்று இந்த தனியார் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர், ஆட்டம், பாட்டங்களுக்கு இடையே காணாமல் போய்க்கொண்டிருக்கிறது :(


ஷோபனா ரவியை யாரும் இன்னும் மறந்திருக்கமாட்டீர்கள்... அவர் செய்தி வாசிக்கும் போது நான் மிக சிறு பெண்... இன்னும் அவர் முகம் நினைவிருக்கிறது!


அன்று தூர்தர்ஷன் வழங்கிய நிகழ்ச்சிகளின் தரத்திற்கும், பயன்களுக்கும் ஈடாக, சமுதாய சிந்தனையுள்ள நிகழ்ச்சிகள் போல் இன்று எந்த சேனலும் நிகழ்ச்சிகள் வழங்குவதில்லை என்பது என் கருத்து!

விஜய் அவார்ட்ஸ் - என் பார்வையில்

இந்த வருடத்திய விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது....

சில நிறைகளும் சில குறைகளும் கலந்து வெற்றிகரமாக 27விருதுகளை திரைத் துறை கலைஞர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தது!


விழா மேடையின் சிறப்பு இது வரை இந்தியாவில் செய்யாதது! நம் தமிழ்(???) தொலைக்காட்சியில் முதலில் முயன்றிருப்பது நமக்குப் பெருமையே!

ஆனால் விருதுகளில் தான் கொஞ்சம் ஏமாற்றம் :( கமல் சாருக்கு நிறைய வி்ருதுகள்! அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கவே விருது! அவரோ வளர்ந்த சிகரம்! அவருக்கு அத்துணை விருதுகளைக் கொடுப்பதற்கு பதில் அதனைப் பிரித்து மற்ற கலைஞர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.....

சாந்தனு என்ன நடித்தார் என்று அவருக்கு விருது??? பாக்கியராஜ்க்கு விஜய் டிவி செய்யும் நன்றி போல!! யாருக்குத் தெரியும்?

ஏ.ஆர்.ரஹ்மான் வரவில்லை... அதற்காக அவரை தேடிச் சென்று விருது கொடுப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்! அவர் என்ன உடல்நிலைக் காரணமாகவா வரவில்லை? இல்லையே!

அஞ்சாதே குருவி மனதில் உள்ளதை அதே உணர்ச்சியுடன் பேசினார்! :)
சூர்யாவும் சினேகாவும் நல்ல தேர்வு!

எல்லாம் நல்ல விஷயங்களே.... ஆனால் இந்த சிவப்பு கம்பள பகுதியில் இந்த திவ்யதர்ஷினியின் தங்கிலீஷ் தொல்லை தாங்க முடியல.... வர எல்லார்கிட்டயும் வேறு அவங்க மேக்கப் முடிந்து ரெடியாக எவ்வளவு நேரம் ஆச்சுனு நாட்டுக்கும் திரைத் துறை முன்னேற்றத்திற்கும் தேவையான அதிமுக்கிய கேள்விகளை கேட்டு குடைச்சல் குடுத்துச்சு!

என்னங்க கேள்வி அது? சுண்ணாம்பு பூசி, பெயிண்ட் அடிச்சு, வார்னிஷ் பண்ணி, அதுவும் சிலர் உடையப் போட்டதற்குப் பின்னாடி அதை தைத்து... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..... எவ்வளவு வேலை?

ஆனாலும் சிலர் அழகாவே வந்திருந்தாங்க.... நம்ம ஜோதிகா சூர்யாவும், சூர்யாவும் தான் ஹைலைட் போங்க... வெண்ணிற உடைல தேவதையும் கந்தர்வனும் மாதிரி என்ன பொருத்தம்!!!! அப்புறம் நம்ம சினேகா! பிறகு பார்வதி அவங்க அடுத்தபடியா அழகா வந்திருந்தாங்க... பின் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியினர் பரவாயில்லை! அவ்வளவுதான் வேறு யாரையும் சொல்ல முடியாது :( வயதில் மூத்தவர்கள் அனைவரும் மரியாதைக்குரிய வகையில் வந்திருந்தனர்!

நடனங்கள் படு மோசம்.... :((( மற்றபடி விழா சிறப்பாகவே இருந்தது!
கலைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பு இத்தகைய விழாக்கள்!

பின் குறிப்பு: விழாவுல போட்ட சாப்பாடு பற்றி ஒரு செய்தியும் இல்லை... ஒரு வேளை சாப்பாடே போடலியோ??? ஹும் :(

June 21, 2009

வாழ்த்துகள் அப்பா!



அனைத்து தந்தைமார்களுக்கும் எனது இனிய தந்தையர் தின வாழ்த்துகளையும் வணக்கங்களையும் கூறிக் கொள்கிறேன்! :)

அப்பாவைப் பற்றி என்னவெல்லாம் எழுதுவது என்று யோசித்து யோசித்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை! ஏனென்றால் எல்லா பெண்களுக்குமே "அப்பா" என்பவர் ஒரு ஹீரோவாக, ரோல் மாடலாக, ஏன் உலகத்திலேயே சிறந்தவராதான் இருப்பாங்க! எப்படி சொல்றதுனு தெரியல.... என்னைப் பொறுத்தவரை என் அப்பாவைப் பற்றிக் கூற வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது! இது சற்று மிகையாகத் தோன்றினாலும் உண்மை!

என் அப்பாவின் வாழ்க்கை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த புத்தகம்! இது என் கருத்து ஆனால் இதனையே என் அப்பாவை அறிந்த பலர் கூறிக் கேட்டிருக்கிறேன்! எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அட்சயப் பாத்திரமாய் அன்பு பொழியும் திருக்குறள் காட்டும் வழி வாழும் ஒரு மெழுகுவர்த்தி மனிதர்! நீங்களும் பழகிப் பாருங்கள் நான் சொல்வது புரியும் :)

அதோ அந்தப் படத்தில் இருப்பது போன்றுதான் நான் இன்றும் என் தந்தை கை பிடித்து நடப்பேன்! என் மகனும் அவ்வாறே அவன் தந்தைக் கை பிடித்து நடக்கும் நாளுக்காக அந்த அழகைக் காண மனம் ஏங்குகிறது...... சரி ரூட் மாறுது!

நான் இன்று இவ்வளவு தன்னம்பிக்கையோட, துணிச்சலோட, எதோ கொஞ்சூண்டு அறிவாளியா, ஈரமான மனசோட, ஏதோ கொஞ்சூண்டு நல்லவளா இருக்கேனா அதுக்கு என் அப்பாதான் காரணம்!
என் அப்பா எனக்கு அளித்த சுதந்திரம் அவர் இரத்தம் இரண்டுமே இவையாவையும் எனக்கு அளித்தது! கி கி கி! பார்க்கக் கூட எங்க அப்பா மாதிரிதான் நான்! அரை சொட்டை டோப்பா, ஒட்டு மீசை வெச்சு பார்த்தா!!!! :)))

ஆனால் சோகம் என்னனா நான் முதுநிலைல தங்க மெடல் வாங்கினப்போ என் அப்பா தான் அதை வாங்கனும்னு நினைச்சேன்... அவங்களுக்கு வர முடியல சரி அவங்க இடத்துல நான் வைத்துப் பார்க்கும் இன்னொருவர் என் கணவர்... சரி அவங்களயாவது கூப்பிட்டு வாங்க சொல்லலாம்னு பார்த்தா நான் தான் வந்து வாங்கனுமாம் நான் வரலைனாதான் அவங்க வாங்கலாமாம் :( நாம தான் காலைல ரிகர்சல் அப்பவே பிரசண்ட் கொடுத்தாச்சே என்ன செய்ய!
நான் தான் போயி வாங்கினேன்! ஆனால் அதுலயும் ஒரு மகிழ்ச்சி என்னனா பொழிலன் என் வயிற்றில் 5மாத சிசு அப்போது! அவன் தான் வாங்கினதா நினைச்சுக்கிட்டேன்! :)

இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியும் என் அப்பா எனக்கு தந்தது! நல்ல வாழ்க்கை, கல்வி, வேலை, நல்ல பெயர், கணவர்னு எல்லாமே எனக்கு அப்பா கொடுத்த அருமையான பரிசுகள்!

பெற்றோர் இல்லாமல், உறவினர் ஆதரவும் இன்றி கண் தெரியாத சூழ்நிலையிலும் தன்னந்தனியாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் தானும் படித்து பிறர் படிக்கவும் உதவி செய்து பட்டப்படிப்பை முடித்து கிடைத்த வங்கி வேலையையும் ஆதரவில்லாதப் பெண்ணுக்கு விட்டுக் கொடுத்து, கஷ்டப்பட்டு போராடி வாழ்க்கையில் இன்று உயரிய நிலையில் இருக்கும் என் அப்பா எங்களை எந்த சிரமும் கொடுக்காமல் மிக மகிழ்ச்சியாக வளர்த்து ஆளாக்கினார்! இன்றும் பொதுசேவை என்று தூக்கத்தினையும் கூட தியாகம் செய்து பிறருக்கு ஓடி உதவும் ஒரு மாமனிதர் அவர்! நான் அவரோட பொண்ணுனு சொல்லிக்கிறத விட ஒரு சிறந்த பெருமை என்ன இருக்க முடியும்?

எனக்கு திருமணம்னு சொல்லி ஒரு அழகான குருவிக்கூட்டுல என்னையும் இணைச்சு வெச்சாங்க எங்க அப்பா! என்னை எப்பவுமே மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளும் என் அப்பாவுக்கு நான் அம்மா மாதிரி!

இப்படி எப்பவுமே என்னை நெஞ்சில் சுமக்கும் அப்பாவைப் பற்றி முழுமையாலாம் எழுத முடியல!

இப்படிப்பட்ட பல அப்பாக்கள் இருக்காங்க... எல்லா அப்பாக்களுக்குமே என் வாழ்த்துகள்! :)))

June 13, 2009

என்ன கலாச்சார சீரழிவு இது?

இந்த மிஸ்।சென்னை சென்னை மேன் போட்டி ரவுசு தாங்க முடியல... இதெல்லாம் தேவையா.... அப்படியே இம்மாதிரி போட்டி நடந்தாலும் இது சென்னை அழகி(??!!) மற்றும் அழகனை(??!!) தேர்ந்தெடுக்கும் போட்டிதானே??

இதற்கு எதற்கு ஆங்கிலம்? எதற்கு ஆடை குறைப்பு அலங்காரம், அதிலும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பேசும் அரைகுறை ஆங்கிலத்திற்கும் தமி"லு"க்கும்... :( சே! என்னத்த சொல்ல....

கண்ணைக் கூசும் அளவிற்கு கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறது.... இது போதாதுனு இப்போலாம் எங்கேனாலும் சரி மாடர்ன் மாடர்ன் அப்படினு நிறைய பேர் செய்யும் லொள்ளு தாங்கமுடியலப்பா.... எதுனாலும் மகிழ்ச்சிய வெளிப்படுத்த கட்டிப்பிடிக்கிறது.... சீ சீ.... வருங்காலம் எப்படி இருக்குமோ பயமாத்தான் இருக்கு! :(

இந்த போட்டில ஆங்கிலம் சரியா பேசலனு போட்டிலருந்து நீக்குறாங்கலாம்.... என்ன கொடுமை இது? தமிழ் நாட்டுத் தலைநகர அழகிக்கும் அழகனுக்கும் தமிழ் தானே கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும்... அடச்சே நான் தான் லூசு... அவங்க பாதி பேர் தமிழ்நாடே கிடையாது... கேரளா, கர்நாடகா மாநிலத்தினர்...

சரி யாராக இருந்தால் என்ன? உண்மையான அழகு என்பது அகத்தின் அழகு! அதுக்கு இங்கே போட்டியில இடமே இல்லப்பா....

ஆண் பெண் எல்லாரும் நல்லா மொக்கை போடுறாங்களா? ஒழுங்கா அதிக செலவு இல்லாம குறைந்தா ஆடைகள் போட்டு பணத்தை மிச்சப்படுத்துறாங்களா? அடுத்த ஆண்/பெண்ணை தொட்டு பேசி இன்னபிற எல்லாம் கேமரா முன்னாடியே சரியா செய்யுறாங்களா? மிக சரியா தமி"லை"யே கொலை பண்ணுறாங்களா? ஆங்கிலம் அப்படினு நினைச்சு நல்லா உளறுறாங்களா? இது தான் போட்டி!!!!! :(((((

கலாச்சாரத்தை சீரழித்து நம் தமிழ்நாட்டுப் பெருமைய கேவலப்படுத்தனும்னே அலையுறாங்களா என்ன?

இவ்வளவும் நான் போட்டியின் விளம்பரத்தைப் பார்த்தும் பல விமர்சனங்களைப் படித்தும் பின் என் மனதிற்கு பட்டதை எழுதினேன்!

இந்த நிகழ்ச்சிய பார்த்திராத எனக்கே இவ்வளவு கோபம்னா பார்ப்பவர்கள் நிலைமை பாவம் தான்!

என் பயணங்களில்........



நான் பிறந்தது முதலே தொடர்வண்டியில் பயணங்கள் பல செய்திருந்தாலும் ஒவ்வொரு பயணமும் எனக்கு அழகானதாகவும் மகிழ்ச்சியானதாகவுமே இருக்கிறது இன்று வரை....

இந்த இரயில் பயணம் பிடிக்காதவர்கள் என்று வெகு சிலர் தான் இருக்கமுடியும்.... பலருக்கும் பிடிக்கும் இந்த இரயில் எனக்கும் பிடிக்கும்னு சொல்வதை விட வாழ்க்கைத் தத்துவங்கள் பலவற்றை இரயில் சொல்வதாகவே எனக்கும் தோன்றும் அளவிற்கு நான் அதனோடு இணைந்தே இருக்கிறேன் அப்படினு கூட சொல்லலாம்!

அந்த தடக் தடக் அப்படினு ஏற்ற இறக்கத்தோட வரும் சத்தம் ரொம்ப அழகான சங்கீதமாவே எனக்கு தோணுது! வாழ்க்கையும் இப்படி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒன்றாவே இருந்தாலும் நம் பயணப் போக்கில் எந்த் மாறுதலும் இல்லாம நாம போகனும்னு இரயில் உணர்த்துவதாவே என் மனசுக்கு தோணுது!

நம் உறவுகள், நண்பர்கள், பொறுப்புகள், கடமைகள், சந்தோஷம், சோகம் அப்படினு பல பெட்டிகளை நம் கூடவே அழைத்துச் செல்கிறோம் நம் வாழ்க்கை என்னும் பயணத்தில்!

ம்ம்ம்... என்ன ஒரே தத்துவ மொக்கைனு நீங்க கேட்பது புரியுது! :)
சும்மாதேன்.... பதிவு தேத்தலாம்னு!

நான் எவ்வளவு முறை இரயில் பயணம் செய்தாலும் பொழில்குட்டியோட இந்த இரண்டாவது இரயில் பயணம் எனக்கும் அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியானதாகவும் எனக்கு சவாலானதாகவும் இருந்தது! :))))

பின்னே என்னங்க ஊருக்கு போகும் போது குட்டிமா நல்லா தூங்கிட்டாரு! 7மணி நேர பயணத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரே குதூகல ஆட்டம் கொஞ்சம் அழுகை! பின் தூங்க ஆரம்பித்தவன் ஊருக்கு போயிதான் எழுந்தான்! ஆனால் திரும்பி வரப்போ..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... வழக்கமா வீட்டில் விலையாடுவது போலவே 12மணி வரை விளையாட்டு! அதிலும் அவனுக்கு ஒரு தோழி வேறு கிடைத்தாச்சு விளையாட்டு துணைக்கு!!!!

சாப்பிடாம, தூங்காம... அவ்வ்வ் என்னையும் தூங்க விடாம விளையாடினான்... :)) எனக்கு இதை பார்க்கும் போது விளையாட்டுகள் பல நிறைந்த என்னுடைய குழந்தைப் பருவ இரயில் பயண நினைவுகள் தான் மனசுல ஓடுச்சு! :))))

அவனுக்கும் இரயில் பயணம் பிடித்தமானதாக இருப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்!
எனக்கு பிடித்தமான இரயில் படமும் இரயில் நிலையப்படமும் கூகுள் உதவியால் உங்களுக்காக மேலே! :))

June 4, 2009

கேள்விகளும் பதிலகளும் - என்னைப் பற்றி என்ன சொல்ல

தம்பி கார்த்திக்கும், தோழி வித்யாவும் என்னை இந்த பதிவு எழுத சொல்லி ரொம்ப கெஞ்சி அழுது புரண்டு கேட்டதுனால நான் பி்ட்டு பிட்டா அள்ளிவிடுறேன்... ஹி ஹி ஹி! சும்மா சொன்னேன்... என்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பிய தோழிக்கும், தம்பிக்கும் நன்றிகள் பல!

இங்கே இனி வரப் போறது எல்லாம் நெசம்தானுங்க....

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் அப்பா வ‌ழி ஆச்சியின் பெய‌ர் சுப்புல‌ட்சுமி... அத‌னால் என‌க்கும் அவ‌ர் நினைவாக‌ சுப்புல‌க்ஷ்மி :) என்னை சுபா என்று எல்லோரும் அழைப்ப‌ர்! ஏனா எங்க‌ள் குடும்ப‌த்தில் மொத்த‌ம் ஐவ‌ர் இதே பெய‌ரில் :)

சுப்புலக்ஷ்மி என்றாலும் சுபா என்றாலும் மிகவும் பிடிக்கும்... ஒரு டிஸ்கி... என் பெயர் ரொம்ப அழகா இருப்பதா நான் உணர்வது என் கணவ்ர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் போது தான்!

2।கடைசியாக அழுதது எப்பொழுது?

என்னை யாராவ‌து கோவ‌மாக‌வோ அல்ல‌து கிண்ட‌லாக‌வோ ஏதாவ‌து சொல்லிவிட்டால் உட‌னே அழுகை வ‌ரும் :(ரொம்ப‌ சென்சிடிவ் டைப் நான்... யாராவ‌து அழுவ‌தைப் பார்த்தாலே என‌க்கும் க‌ண்ணீர் வ‌ழியும்!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ப‌ர‌வால‌ பிடிக்கும்னு சொல்ல‌லாம்...

4।பிடித்த மதிய உணவு என்ன?

சாம்பார் சாத‌ம்/வ‌த்த‌ல் குழ‌ம்பு சாத‌ம் + த‌யிர் சாத‌ம் + அப்ப‌ள‌ம்ரொம்ப‌ பிடிக்கும்... காய், கீரையும் ரொம்ப‌ புடிக்கும் ஆனால் காய் ம‌ற்றும் கீரை த‌விர‌ அனைத்தும் அள‌வு குறைவாக‌ இருக்க‌னும்!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ரொம்ப‌ எளிதில் ந‌ட்பாவ‌தாக‌ எல்லாரும் சொல்லிருக்காங்க‌ :)நான் எல்லாரிட‌மும் ந‌ல்லா பேசுவேன், பின் அவ‌ர்க‌ள் குண‌ம் அறிந்து தான் ந‌ட்பு வைத்தல் எல்லாம்...

6।கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

க‌ட‌ல் தான் எப்ப‌வும் என் சாய்ஸ்... க‌ட‌ல் மீது தீராக் காத‌ல் என‌க்கு!!! :)))
ஆனால் குளியலறையில் சில்லென்ற கொட்டும் நீரில் வெகு நேரம் குளிப்பது தான் மிக மிக பிடிக்கும்...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவ‌ர் முக‌ பாவ‌னை, க‌ண்க‌ள், சிகையலங்காரம்,உடைய‌ல‌ங்கார‌ம்... ந‌ன்கு சிரித்து பேசினால் அவ‌ர் வாயையும் பார்ப்பேன் :))

8। உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

என் கிட்ட‌ பிடிக்காத‌து ச‌ட்டுனு வ‌ரும் சுரீர் கோவ‌ம்...:( எல்லாரிடமும் வைக்கும் அதிக அன்பு!

பிடித்த‌து அந்த‌ கோவ‌த்தையும் உட‌னே த‌ணித்துவிடுவேன் சிறிது நேரத்தில்... அதோடு நான் அதிக அன்பு வைத்துள்ள சிலர் மீது மட்டும் தான் கோவத்தைக் காட்டுவேன்... பொழிலன் மீது மட்டும் அதிக அன்பு இருந்தாலும் கோவத்தைக் காட்டுவதில்லை! :)
எல்லாரிடமும் வைக்கும் அதிக அன்பு பிடிக்கவும் செய்யும்... இது தான் என்னுடைய பிளஸும் மைனஸும் :)

9।உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த‌ விஷ‌ய‌ம் அமைதியாப் பேசுற‌து, அழ‌கா சிரிப்ப‌து, த‌மிழார்வ‌ம்,சில‌ விஷ‌ய‌ங்க‌ளில் குழ‌ந்தைத் த‌ன‌ம், அழகா பாடுவ‌து, என் மீது அவங்களுக்குத் தெரியாமலே இருக்கும் பொஸெஸிவ், எங்கள் அன்பு, என் மீதுள்ள பாசம், பொறுமையா பொருட்களைக் கையாள்வது,இந்த இளம் வயதிலேயே உற‌வுக‌ளை மதித்து நேசிக்கிற‌து, அவ‌ங்க‌ த‌ங்கைய நேசிக்கிற‌து( இது பொதுவான‌து தான் ஆனால் என்னைப் போல் அண்ண‌ன் இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு இது பார்க்கும் போது மகிழ்ச்சி) இப்படி பிடித்த‌துனு நிறை‌......................................ய‌ சொல்ல‌லாம்! ஒரு ப‌திவு ப‌த்தாது :( முக்கிய‌மா அவ‌ங்க‌ அவ‌ங்க‌ளாவே இருப்ப‌து ரொம்ப பிடிக்கும்!

பிடிக்காத‌து அவ‌ங்க‌ கோவ‌ம் :( வேறு எதுவும் இல்லை :)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் க‌ண‌வ‌ர்! அவ‌ங்க‌ அமெரிக்காவில் நான் இங்கே...

11।இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீல‌ நிற‌ சுடிதார்

12।என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நிறைய‌... இப்போது ஓடிக் கொண்டிருப்ப‌து... "உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது..." ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் :)

13।வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு! கருமையான எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் அதிகம் புத்தகம் வாசிப்பதாலும் கருமையில் தான் எழுத்துகள் அழகா இருப்பதாக எண்ணுவதாலும்...

14.பிடித்த மணம்?

மல்லிகை, எங்கள் பொழிலனின் வாய் மணம், பொழிலன் தலை முடி வாசனை, மழையில் நனையும் மண் வாசனை, பச்சிளம் சிசு வாசனை, பசுஞ்சாணம் தெளித்த வாசல் வாசனை மற்றும் இன்ன பிற :)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தீஷூ- காரணம்: அதிசயிக்க வைக்கும் ஆக்டிவிடிஸ் அறிவாளி!

ஜோதி- காரணம் : ஒரு நண்பரைப் பற்றி அறியலாம் என்று தான்...

16। உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

கார்த்திக்கின் பெரும்பாலான பதிவுகள் மிக பிடிக்கும்... இன்னதென்று சொல்ல முடியாது...

வித்யாவின் அனைத்து யதார்த்தமான, நச் பதிவுகளும் பிடிக்கும்.... உதாரணம் "ஏதாவது செய்யனும் பாஸ்", நிவா"ரணம்" போன்றவை....

17। பிடித்த விளையாட்டு?

முதலில் கூடைப் பந்து, பூப்பந்து இப்போது பொழிலனோடு விளையாடும் அனைத்து விளையாட்டுகளும்!

18।கண்ணாடி அணிபவரா?

இல்லை...

19।எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நல்ல கதை, உருக்கமான ஆனால் தோற்காத காதல், திகில், நகைச்சுவைபோன்ற அம்சங்கள் நிறைந்த படங்கள் பிடிக்கும்!
முக்கியமாக பெண்களை இழிவு படுத்தும் அல்லது இம்சிக்கும் காட்சிகள் இருந்தால் அறவே பிடிக்காது!

20।கடைசியாகப் பார்த்த படம்?

படம் பார்ப்பதில் அத்துணை ஆர்வம் இல்லை.... தியேட்டரில் பார்க்கத் தான்பிடிக்கும்! :) கடைசியாக வீட்டில் பார்த்தது பில்லா என நினைவு!

21।பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம், இளவேனிற்காலம்... :)

22। இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

குழந்தைகளுக்கான கதைகள், லூயி பிரெய்லியின் வாழ்க்கை வரலாறு பற்றியபுத்தகம்....

23।உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

வாரம் ஒரு முறை அல்லது இரு முறை... பொழிலன் , சில சமயம் பூக்கள்!தற்போது பொழில் குட்டி!

24।உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பொழிலனின் சிரிப்பு,அவன் குரல், மெல்லிய இசை, பறவைகள் சத்தம், நாய்க் குட்டி சத்தம்,மழலைகள் குரல் இப்படி நிறைய பிடிக்கும்!

சத்தமாக பேசுவது எனக்கு பிடிக்காது... ஆனால் நானே சத்தமாக பேசுவதாக என் கணவரிடம் திட்டுவாங்குவேன் :) பின் இந்த சுவற்றில், பேப்பரில், தரையில் நகத்தால் தேய்ப்பது பிடிக்காது!
வாகனங்களின் ஹார்ன் சத்தம் சுத்தமாகப் பிடிக்காது!

25।வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி, மும்பை, டேராடூன், மிசோரி என வட இந்திய இடங்கள் தான்!

26।உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய பேசுவேன், ரொம்ப அழகா கோலம் போடுவேன், நல்லா வரைவேன்,அப்புறம் எவ்வளவு பெரிய புத்தகம் ஆனாலும் ஒரு இரவில் படிக்கும் பழக்கம் உண்டு... பொன்னியின்செல்வன் முதல் 3 பகுதிகள் விரிவான தொகுப்பு தலையணை அளவு இருக்கும் அதை மட்டும் இரு இரவுகள் எடுத்து முடித்தேன்! பொழிலன் பிறந்த பின் அவ்வாறு செய்ய இயலவில்லை...

இதெல்லாம் விட ஒரு தனித் திறமை என்னனா யாரையும் பேச விடாம நான் மட்டும் பேசனும்னா ரொம்ப நல்லா செய்வேன! :)))

27।உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கணவன் மனைவி பேச்சுக்கு இடையே விளையாட்டாக கூட இன்னொருவர் மூக்கை நுழைப்பது, சொன்ன சொல் தவறுவது, நட்பிலும் உறவிலும் நம்பிக்கை துரோகம், இந்த பக்கம் ஒரு மாதிரி பேசிட்டு அந்த பக்கம் போயி மாற்றிப் பேசுவது இப்படி நிறைய.... இதையெல்லாம் நான் நண்பர்கள் வட்டாரத்திலேயே அனுபவித்து இருக்கிறேன் :( யாராக இருந்தாலும் சரி இந்த குணங்கள் எனக்கு பிடிக்காது!

28।உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம் தான்! என் கிட்ட யாராவது கோவப் பட்டா ஏத்துக்க முடியாது ஆனால் நான் நல்லா கோவப் படுவேன்... இப்போதான் குறைச்சிக்கிட்டே இருக்கேன்!

29।உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல், கேரளா,டேராடூன்,டெல்லி!
பின் பனி நிறைந்த எல்லா இடங்களும்....

३०எப்படி இருக்கணும்னு ஆசை?

எல்லாருக்கும் உண்மையானவளா, அன்பானவளா, நல்லவளா, கடவுளுக்கும் உண்மையானவளா இருக்கனும்....

३१)கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

அப்படி எதுவுமே இல்லை... அவங்களிடம் சொல்லாம எதுவுமே செய்யமாட்டேன்...
அதுவுமில்லாம என்னோட ஒவ்வொரு அசைவினிலேயும் அவங்களும் இருக்கனும்னுரொம்ப ஆசைப் படுவேன்...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை சரவணபவன் முழு சாப்பாடு மாதிரி! இனிப்பு, கசப்புனு எல்லாம் நிறைந்தது! மொத்தத்தில் கடவுள் அளித்த ஒரு சுவையான விருந்து! :))))

June 2, 2009

திருமணச் சடங்குகள் தமிழில் நடந்தால் என்ன?




இந்த உலகத்தில் எந்த மதத்தினரானாலும் திருமணத்தின் போது பல உறுதிமொழிகளுடன் தான் தன் வாழ்க்கைத் துணையைக் கைபிடிக்கின்றனர்!

அப்படிபட்ட திருமணத்தில் நிகழ்த்தப் ப்டும் உறுதிமொழிகள் அதுவும் குறிப்பாக நம் இந்து மத முறைப்படி நிகழும் திருமணங்களில் சொல்லப்படும் உறுதிமொழிகள் மிக அதிகம்.... ஆனால் இவை யாவும் வட மொழியிலேயே சொல்லப்படுகின்றன!

அதிலும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு என்னவென்றால் இந்த வடமொழியில் ஏற்கப்படும் உறுதிமொழியில் ஒரு கணவன் மட்டுமே கூற வேண்டிய உறுதிமொழி அந்த ஐயர் வாய் வழியாக சொல்லிக் கேட்டுப் பின் அந்த மாப்பிள்ளைக் கூற வேண்டி உள்ளது...

இதன் பொருள் முழுமையாகத் தெரிந்த ஆண் நிச்சயம் இதை ஏற்கமாட்டார்....... "எனக்கு எழுதிக் கொடுங்கள் நான் வேண்டுமானால் வாசிக்கிறேன், அவள் எனக்கு தான் மனைவி ஆகப் போகிறாள் ஆதலால் தாங்கள் இதைக் கூறுவது சரியல்ல" என்றே கூறுவார்!

எனக்கு முழுமையாக மந்திரத்தின் பொருள் தெரியாது என்றாலும் ஏதோ ஒரு வலைப்பூவில் படித்த நியாபகத்தை வைத்துக் கூறுகிறேன்....

"இன்று முதல் .... ஆகிய நான் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு சாட்சியாக கைப்பிடிக்கப் போகும் பெண்ணின் வாழ்வில் நிகழும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதோடு நானும் அவளோடு இணைந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வேன்.... என்னோடு சரி பாதியாக இணையும் அவளுக்கு என் மனம்,உடல், உடைமை என அனைத்திலும் உரிமை கொடுத்து, அவளுக்குக் கணவனாகவும், தோழனாகவும், தாய் மற்றும் தந்தையாகவும் இருந்து அவளைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்! "

இப்படி தான் வரும் அந்த உருதி மொழி.... நான் கூறியதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.... நான் தான் முழுமையாக என்ன இருந்தது என்று மறந்துவிட்டேனே :( ஆனால் இன்னும் சில ஆழ்ந்த அன்பிற்கான வரிகளும் உண்டு.... இதையெல்லாமா அவர் வாய்வழி கேட்டுக் கூறுவது?

இப்படியே பெண்ணுக்கும் உறுதிமொழி இருக்கும்! பின் இதை எதற்காக ஐயர் வாய்வழி கேட்டுக் கூற வேண்டும்? நம்மிடம் தமிழில்/ வடமொழியில் எழுதிக் கொடுத்தால் நாமே கூறுவோமே!

இந்த திருமண முறை மாறவேண்டும்.... அனைத்தும் தமிழில் கூறி நிகழ வேண்டும்.... இன்று பல திருமணங்கள் அவ்வாறு நிகழத் தொடங்கிவிட்டன... ஆனால் நான் சடங்குகள் இன்றி திருமணம் நடக்க வேண்டும் என்று கூறவில்லை.... மந்திரங்கள் தமிழில் ஓதப் பட வேண்டும் அதுவும் பெண்/மாப்பிள்ளையால் மட்டுமே ஓதப் படவேண்டும்!


திருமணத்தில் வைக்கப் படும் சடங்குகளுக்கும் அழகான அர்த்தங்கள் உண்டு அதனால் பகுத்தறிவு பேசுகிறேன் என்று அதையெல்லாம் நான் வேண்டாம் என்று கூற மாட்டேன்... எந்த ஒரு பகுத்தறிவுவாதியும் வாழைமரம், அக்னி குண்டம், அரிசிக் கலசம், நீரக் கலசம், தேங்காய், பழங்கள் என்று திருமணத்தில் வைக்கப் படும் பொருட்களின் காரணம் தெரிந்தால் அதையெல்லாம் வேண்டாம் என்று கூறவே மாட்டார்!

துணிகளைக் கட்டி அக்னி வலம், மங்கல நாண் என னைத்திற்கும் காரணங்கள் உண்டு!

அதனால் இந்த மந்திரங்கள் தமிழில் நம் வாயாலேயே சொல்லப்படனும் என்பது தான் என் கருத்து!

அதிலும் கிறித்துவத் திருமணங்களிலும் நான் பார்த்த வரை பாதிரியார் தமிழில்/ஆங்கிலத்தில் நம் ஐயர் கூறும் அதே வரிகளை சில சிறிய மாற்றங்களுடன் கூறுவார்! இதுவும் தவறுதான் :( அந்த மாப்பிள்ளை/ பெண்ணே நேரடியாக சொல்வது சாலச் சிறந்தது!

இப்போது சில திருமணங்கள் புதுமையாக நிகழ்த்தப்படுவதும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்... வழக்கமாக திருமணங்களில் வைக்கப்படும் பொருட்கள் புத்தகங்களாக மாறியிருப்பதும் நல்ல விஷயமே! புத்தகமும் காலத்தால் அழியாதக் கருத்துகள் நிறைந்திருக்கும் ஒரு மங்கலமான பொருளே! :)

வேண்டுகோள்:

யாராவது இந்த திருமணச் சடங்கு பற்றி விரிவாக எழுதியிருக்கும் அந்த வலைப்பூவின் தொடுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் நம் எல்லாருக்கும் நான் கூறுவது தெளிவாகப் புரியும்! :)

ஒரு சமையல் கில்லாடியும் சில அப்பாவிகளும்

சந்தனமுல்லை அவர்களின் இந்தப் பதிவின் தாக்கம் தான் எனது பதிவு!
அதனால் அவருக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன் :)

அப்புறம் அந்த அப்பாவிகள் யாருனு முதலில் சொல்லிடுறேன்....
அப்பா, கணவர்!!!

இப்போ நான் சொல்லப் போறது ஒவ்வொரு உணவையும் நான் முதன் முதலாக செய்தப்போ ஏற்பட்ட அனுபவம் பத்திதான்...

சாம்பார்:

நான் எட்டாம் வகுப்பு முடித்த விடுமுறைல தான் முதன் முதலில் ஒரு புத்தகத்தைப் பார்த்து நானே சாம்பார் வைக்கிறேன் யாரும் உள்ளே சமையலறைப் பக்கமே வரக் கூடாதுனு சொல்லிட்டு புத்தகமும் கையுமா கிச்சன் உள்ளே போனவதான்...

அப்பாடா ஒரு வழியா புத்தகத்தை புரட்டி பொருட்களை எடுத்தா அளவு எல்லாம் புரியல... சரி தோராயமா போடுவோம்னு எல்லாத்தையும் ஒரு கை அள்ளிக்கிட்டேன்... வெந்தயம், உளுந்து, சீரகம் இத்தியாதிகள தான் சொல்றேன்!
ஒரு வழியா புத்தகமுறைப்படி எல்லாம் செய்து முடித்து ரொம்ப களைப்பா வந்து உட்கார்ந்தாச்சு.... அப்பா மதிய உணவுக்காக வந்து சாப்பிட உட்கார்ந்தா அய்யோ பாவம் அவுங்க முகம் போன விதமே சரியில்ல... ஆனாலும் பெத்த பொண்ணாச்சே... சரியில்லனு சொல்ல மனசு வரல... எப்படியோ சாப்பிட்டு கிளம்பிட்டாங்க...

அடுத்ததா நாங்க எல்லாரும் சாப்பிடும் போது தான் அய்யோ! சீ... உவ்வே அப்படி ஒரு கசப்பு... வெந்தயத்திற்கு குறைவில்லாமல் போட்டுவிட்டேன் போல :( பிறகு என்ன செய்ய தியாகி அப்பாவைத் தவிர நாங்கள் யாரும் மருந்துக்குக் கூட அந்த சாம்பாரை தொடவில்லை!

சாம்பார்னா அது எங்க அம்மா வைக்கும் சாம்பார் தான் அந்த சுவைக்கு ஈடான சாம்பார் வேறு எங்கேயும் சாப்பிட்டதில்லை நான்!

இட்லி:

அடக்கொடுமையே கல்யாணம் பண்ணினா கிரைண்டர்ல மாவு ஆட்டனுமானு இருந்துச்சு... பாவம் பொழிலன் அப்பா... மனைவிக்கு கிரைண்டர் போடத் தெரியாது என்னும் அதிர்ச்சி செய்தி அவங்களுக்கு தெரியாது! :)

எனக்கு அப்போ கிரைண்டர் மூடிய எப்படி திறக்கனும்னு கூட தெரியாது :(
கிரைண்டர் போட கற்றுக் கொள்ள மட்டும் ஏனோ ஆர்வம் இருந்ததில்லை :(

நான் என்ன செய்வேன்.... அத்தையிடம் கேட்க பயம்... திருமணமான புதிது தானே அதனால்... அம்மாவிடன் கேட்டால் திட்டு நிச்சயம்... என்ன செய்ய அம்மாவிடமே கேட்டேன்... எப்படி கிரைண்டர் திறந்து அதை பயன்படுத்துவதுனு... ஆனாலும் ஊற வைக்கும் அளவு மட்டும் பிடி படல...

கொடுமைங்க.... உளுந்து ஆட்டுறது ஒரு கலை... அது எனககு சுத்தமா தெரியாது... ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி போனில் கேட்டதை வைச்சு என்னமோ வெள்ளையா அரைச்சு வெச்சு இட்லி சுட்டா, அய்யோ இட்லிய காணோம் இட்லி தட்டுல... இட்லி கலர்ல சின்ன சின்ன தட்டையான ஒன்னுதான் வந்துச்சு...

பாவம் புது மாப்பிள்ளை.... ஒண்ணுமே சொல்லலை... என் அப்பா வழியில் ஒரு தியாகி எனக்கு கிடைத்த மகிழ்ச்சி... ஆனால் மனசு கேட்கலை... பாவமா இருந்துச்சு அவங்கள பார்க்க...

சரினு கொஞ்சம் மாற்தல் பண்ணினா அடக் கடவுளே அதுவே தேவலை... இது லட்டை விட மோசம்... ம்ம்ம் இதையும் ஒரு அப்பாவி சாப்பிட்டாங்க :)))

அப்புறம் ஒரு வழியா என் அத்தை மாவுக்கு ஊறவைப்பதிலிருந்து ஆட்டுவது வரை நேரில் பார்த்து பின் தான் முழுமையாக் கத்துக்கிட்டேன்! :)

என் அத்தை மாதிரி இந்த உலகத்துல யாராலயும் இட்லி சுட முடியாதுங்க... அப்படி ஒரு மல்லிகைப் பூ மாதிரி வெள்ளைப் பூக்கள் தான் அவை... அவங்க அரைச்ச மாவே ஐஸ் கிரீம் மாதிரி இருக்குனு நான் எப்பவும் சொல்லுவேன் என் அத்தைகிட்ட.... அப்படி ஒரு இட்லி சாப்பிட்டு வளர்ந்த பொழிலன் அப்பா என் முதல் இட்லியையும் சாப்பிட்டத நினைச்சா அவங்களுக்கு ஒரு சிலையே வைத்துப் பாராட்டலாம்! :)

மீன் வறுவல்:

இப்போ மீன் குழம்பு, கறிக்குழம்பு, சிக்கன் மட்டன் அது இதுனு சமைச்சு விதம் விதமா கலக்குற நான் முதன் முதலில் செய்த மீன் வறுவல்...

நான் சைவக் குடும்பத்திலிருந்து வந்ததால் இது பற்றி தெரியாது... என்னை யாரும் அசைவம் சமைக்கனும்னு கட்டாயப் படுத்தவும் இல்லை... நானாவே தான் செய்து பார்ப்போமேனு முயற்சில இறங்கினேன்....

மீன் வறுவல்னா உருளை வறுவல் போலனு நினைச்சு மீன் வாங்கி மீன்காரரே அதை வெட்டி சுத்தம் செய்து கொடுக்க நான் மேலும் கழுவிட்டு அதை அப்படியே வாணலியில் எண்ணெய் விட்டு தாளிச்சு, உப்பு மசாலா போட்ட மீனை வாணலியில் போட்டு கிண்டி கிளறி, பிய்ச்சு பிசறி...

இது என்ன பார்த்தா அத்தை வறுத்த மீன் மாதிரி இல்லையேனு யோசிச்சு சரி நமக்கு தான் ஒரு அப்பாவி இருக்காங்களே வந்ததும் கேப்போம்னு கேட்டா... என் மீன் வறுவலைப் பார்த்து அதிர்ச்சில அவங்க மயங்கி விழாதது தான் குறை! :))))

இது தாங்க என்னால் மறக்கவே முடியாத படு மோசமான முதல் மூன்று வகை சமையல் அனுபவம்!

இதைப் படிச்சுட்டு யாரும் எங்க வீட்டுக்கு வர பயப்பட வேண்டாம்... இப்போ நல்லாவே அசைவம் சமைப்பேங்க.... அழகான இட்லிகளும் சுடுவேன்! பொழிலனுக்குனே வேறு தனியே பல வகை சத்து உணவுகளை தயாரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது ;) பொழிலன் அப்பாக்கிட்ட சமையலில் நல்ல பெயரே வாங்கிட்டேனா பார்த்துக்கங்களேன்... :)))) அதே போல பொழிலன் அப்பாவுக்கு பிடித்ததை செய்து தருவதும் மன நிறைவு அளிக்கும் விஷயம்! :)

ஆனால் சமையலில் நளபாகம் தான் சிறந்ததுனு சொல்ற நம்ம நாட்டில் மட்டுமில்லை, வெளிநாடுகளில் கூட சமையல் எப்படி பெண்கள் வசம் வந்தது என்று தெரியவில்லை....

முல்லை கூறுவது போல் ஒரு காலத்தில் பெண்கள் சமையலறைப் பக்கம் தான் இருப்பர் என்று படித்திருக்கிறேன் :( இன்றும் பல வயதான பெண்களை அப்படி பார்க்கலாம்.... இது மாற வேண்டிய ஒன்றுதான்.....

பின்குறிப்பு:

அப்பாடா ஒரு வழியா இன்னைக்கு ஒரு மொக்கைப் பதிவு தேத்தியாச்சு...

May 30, 2009

கொட்டும் பனி அருவியில் குட்டிப் பொழிலன்



பொழிலனின் முதல் மே மாதம்... அவனை இந்த வயதிற்கேற்றவாறு எங்காவதுக் கூட்டிச் செல்லலாம் என்று இந்த கொட்டும் பனி அருவி கண்காட்சிக்கு அழைத்து சென்றோம்!

எனக்கோ குட்டிமாவிற்கு குளுராமல் அவன் மகிழும் விதமாக அனைத்தும் அமையவேண்டுமே என்று ஒரே யோசனை... ஒரு வழியாக கண்காட்சியகத்திற்கு வந்தாச்சு... பொழிலன் போன்ற அதி முக்கிய நபர்களுக்கு மட்டும் நுழைவு இலவசம் :))))) 4அடிக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கு நுழைவு சீட்டு கண்டிப்பாக வேண்டுமாம்... நான் அதைவிட ஒன்றரை அடி தான் கூட... ஆனால் விடலயே :(((( (மனசாட்சி: அடங்கு அடங்கு!)

ஒரு வழியா உள்ளே நுழைந்தா ஆஹா! என்னா குளுமை என்னா குளுமை!
தரையெல்லாம் பனிக்கட்டி, சுவரும் பனி.... ரொம்ப அருமை!
ஆங்காங்கே சில இடங்களில் பனி அருவி உள்ளது... அதிலிருந்து பனி மழை போல்... முடியல பொழிலனுக்கு ஒரே கொண்டாட்டம்... பனி அவன் தலையில் படாம மறைத்து ஒரு சில சாரல் துளிகளை மட்டுமே அவனிடம் போக அனுமதித்தேன்... இவனுக்கு ஒரே கொண்டாட்டம்... அப்படி ஒரு சிரிப்பு...

அங்கே ஆட்டமும் பாட்டமும் என ஒரு நடனக் குழு குதித்துக் கொண்டும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டும் இருந்தமையால் கொஞ்சம் செவிக்குத் தொல்லை!

அடுத்ததாக பேய் குகை! பெயரக் கேட்டாலே சும்மா டெர்ரரா இருக்கா?
அந்த குகையில் விசேஷம் என்னனா இருட்டான அவ்வப்போது எரிந்து எரிந்து அணையும் விளக்குகளுடன், ஒரு குரல் " ஹெல்லோ பேயீயீயீ" என்று கேட்கும்... பின் சிறிது தூரம் சென்றதும் மற்றொரு குரல் கத்தும் கொலவெறியோட... நம்ம பயந்து கத்துறது இல்லனு அவங்களே கத்திக்கிறாங்க போல :))) ஏன்னா முதலில் எனக்கு சிரிப்பா தான் இருந்தது! :))))

இந்த குகை அங்கங்கே வளைந்து வளைந்து செல்லும்... ஒரு வளைவில் தான் ஒரு பயங்கரம் (அ) நகைச்சுவை! பொழிலன் ஒரு தைரியசாலி... ஒரு குட்டி மனிதன் பேய் வேடம் போட்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்க நான் திரும்பியதும் அதைப் பார்த்து கொஞ்சம் பயந்தேன்... பொழிலன் அதைக் கண்டுகொள்ளவில்லை... ஆனால் அது திடீர்னு கையை தூக்கி ஆட்டுச்சு பாருங்க...

"ஆஆஆஆ அம்மா அம்மா!" இது நான்.... "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி!" இது பொழிலன்! அவனுக்கோ பேயைப் பார்த்து ஒரே சிரிப்பு... எனக்கோ பயம்...
அந்த பேய் வேடம் வெளியே வெளிச்சத்தில் சிரிப்பாக இருந்தாலும் உள்ளே கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு!

பிறகு வெளியே வந்து டோராவின் புதிர் வீட்டிற்கு சென்று வந்தோம்... வெளியே வந்தால் அதே பேய் மனிதன்... நாங்களும் சென்று பேசினோம் ஆனாலும் கை குலுக்க கொஞ்சம் பயம்... அது கையை புகைப்படத்தில் பாருங்களேன்.... பொழிலன் தான் அதோடு மறுபடியும் சிரித்து அது கையைப் பிடித்து நகங்களைத் தடவிப் பார்த்து மீண்டும் சிரிப்பு! :))) இளம் கன்று பயம் அறியாது!

ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்களாவே இருந்தது இன்று! :)))))









May 28, 2009

குழந்தையின் நிறமும் அறிவியல் உண்மைகளும்

கருவில் வளரும் குழந்தை நல்ல சிவந்த நிறமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நாம் பொதுவாக குங்குமப் பூ உண்ணத் துவங்குகிறோம்!

ஆனால் நான் சில மாதங்களுக்கு முன் மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டறிந்த உண்மைகளை உங்களுக்காக கூறுகிறேன்...

குழந்தையின் நிறம் பற்றிய மருத்துவ ரீதியான விளக்கம்:

* குங்குமப்பூ கருவின் நிறத்தை தீர்மானிப்பதோ அல்லது அதில் மாற்றங்கள் செய்வதோ இல்லை; குங்குமப் பூ இரும்புச் சத்து நிறைந்தது அதனால் கர்ப்பகாலத்தில் இதனை எடுத்துக் கொள்வது நல்லது

*திராட்சை, நாவல் போன்ற பழங்களும் குழந்தையின் நிறத்தில் பங்கெடுப்பது இல்லை

*கேரட் குழந்தையின் நிறத்தை மேம்படுத்தும்

*குழந்தை கருப்பாக பிறந்துவிடுமோ என்று தாய்மார்கள் சிலர் இரும்புசத்து மாத்திரை உட்கொள்வதில்லை; இதுவும் தவறான கருத்து!

ஆகையினால் தாய்மார்களே இரும்புசத்து அதிகம் சேர்த்துக் கொண்டு உங்களையும் குழந்தையையும் ஆரோக்கியமாக பராமரித்துக் கொள்ளுங்கள்! :)

May 26, 2009

மே மாதமும் இன்றைய குழந்தைகளும் நேற்றைய நானும்

இந்த மே மாதம் என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான்!
பெரியவர்களானதும் தான் ஸ்ஸ்ஸ் அப்பா இந்த வெயில் தொல்லை தாங்கலீயே அப்படினு அக்கடானு ஒரு இடத்துலயே அடைந்து கிடப்பது எல்லாம் துவங்கிவிடும்!

ஆனால் சிறு பிள்ளை பருவத்தில் வெயிலாவது ஒன்னாவது... இப்படி ஒரு அருமையான நேரம் மீண்டும் கிடைக்க எவ்வலவு நாள் காத்திருக்க வேண்டும் என்று எந்த கவலையும் இன்றி, பசி, உறக்கம் கூட இன்றி எப்படியெல்லாம் விளையாடி இருப்போம் நாம்!

இப்போ ஏன் இந்த மொக்கைனு நீங்க கேட்க வருவது புரியுது... என்ன செய்ய நாள்தோறும் வீதியெங்கும் சிதறி ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும் போது மனதிற்குள் இந்த கொசுவர்த்தி சுருளும் ஒரு பெருமூச்சும் (சத்தியமா பொறாமை இல்லீங்கோ) வந்து போகிறது!

முதலில் எல்லாம் தேர்வு அட்டவணை வந்ததுமே படிப்பதற்கு அட்டவணை போடுவதோடு, பல புதிய விளையாட்டுகளையும் எழுதி வைத்துக் கொள்வோம்... விடுமுறை நாளை எதிர் நோக்கி :)

பொதுவாக ஓடிப் பிடித்து விளையாடுவது, ஐஸ் பாய்ஸ், கண்ணாமூச்சி, நாடு பிடித்தல், ஓடும் போட்டி, நொண்டி, முயல் ஓட்டப் போட்டி என்று பல விளையாட்டுகள் வெளியில் சென்று விளையாடுவோம்! அப்பா அப்போதெல்லாம் எவ்வளவு விழுப்புண்கள், வீரத் தழும்புகள் :))))) இப்போ நினைத்தால் சிரிப்புதான் வருகிறது!

இந்த வெயில்ல நாம ஆடுறத பார்த்து அம்மாஸ் எல்லாம் கவலை பட்டு கேரம், செஸ், பல்லாங்குழினு வாங்கிக் குடுத்து எங்க எல்லாரையும் மதியம் மட்டும் ரொம்ப சிரமப் பட்டு வீட்டுக்குள்ள அடைச்சாங்க! அப்பவும் அடங்குவோமா? ம்ஹும்...

சமையலறைல கண்ணுல கையில சிக்கினதையும், வெளியில் இருக்கும் செடி, பாதம் கொட்டை எல்லாத்தையும் பொறுக்கி சோறு சமைக்கிறேன் பேர்வழினு வீட்டையே மண், செடி குப்பையாக்கு சமைச்சு வெச்சிருப்போம்... அப்பா அலுவலகம் முடிந்து வந்ததும் அதை குடுக்குறதுல ஒரு மகிழ்ச்சி எனக்கும் அப்பாவுக்கும்! :)

மறுபடியும் வெளியே தான் ஆட்டம்... இப்படியா போயிக்கிட்டிருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு மாற்றம்... படிப்பு சுமையும் வயதும் ஏற துவங்கியாச்சு... :((( இப்படியெல்லாம் விளையாட அதிக நேரம் கிடைப்பது இல்லை மே மாதத்தில் கூட... இந்தி வகுப்பு, நடன வகுப்பு, யோகா அப்படி இப்படினு நாட்களை நிரப்பிடுவோம்! அப்படியே நேரம் கிடைச்சாலும் முன்ன மாதிரி ஓடி விளையாட கூச்சமா இருக்கும் அதுனால பூப்பந்து ஆட்டம் தான் விளையாடுவோம்... பதின்ம வயது பெண்(குழந்தைகள்) எல்லாரும் சேர்ந்து இரவு 8மணிக்கு விளையாட வருவோம் ஒரு 9மணி வரைக்கும் விளையாடுவோம்...

இப்படியா போகும் மே மாதங்களில் பெரும்பாலும் இந்த சுற்றுலாவும் இருக்கும் நான் 9வது வகுப்பு வரும் வரை... அதுவும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமையும் :)))) அதன் பிறகு சுற்றுலா கனவிற்கும் பள்ளி ஆப்படித்தது மே மாதத்தில் கூட :(((

கல்லூரி நாட்களில் எப்படி தான் மே மாதம் போனதோ தெரியலை! ஆனால் முதுநிலை கல்வி படிக்கிறப்போ சென்னைல கல்லூரி விடுதில நல்லா விளையாடுவோம்... எங்கள் விடுதியில் எல்லாருமே பெண்கள் எங்களுக்குனு தனி மைதானம், பூப்பந்தாட்ட ஆடுகளம், கிரிக்கெட் ஆடுகளம்(யாருக்கும் ஒழுங்கா விளையாடத் தெரியாதுன்ற உண்மைய எப்படி உங்க கிட்ட சொல்றது!), மேசைப் பந்து, கால் பந்து, கூடைப் பந்து என்று எல்லாவற்றிற்கும் தனி ஆடுகளம்... அதனால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!

அதிலும் இந்த பூப்பந்தும், கூடைப் பந்தும் மிகவும் பிடித்தமானது பெண்களுக்கு.... இந்த பூப்பந்தாட்ட வலை இருக்கே அதில் விளையாட்டோடு நிறைய செல்பேசி காதல் கதைகளும், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டோரின் ஜொள்ளு மொக்கைகளும் நிரம்பியிருக்கும்! :)))))

அங்கே தான் மீண்டும் எங்கள் குழந்தைப் பருவ விளையாட்டுகள் அரங்கேறின... :)))) அத்துணை விளையாட்டுகளையும் விளையாடினோம் கண்ணாமூச்சி தவிர!

ஆனால் அங்கே மே மாதத்தில் விளையாட முடியாது... கல்லூரி நாட்களில் தான் விளையாடுவோம்.... ஆக இந்த மே மாத கும்மி 9வது வகுப்போடு போனது... பின்னர் கொஞ்சம் 10ம் வகுப்பு முடிந்த மே மாதம் தலை தூக்கினாலும் பழைய நிலைக்கு வரவில்லை நாங்கள் :(

கல்லூரி விடுதியில் ஓரளவு பழைய மாதிரி விளையாடினாலும் குழந்தைப் பருவத்தில் விளையாடின முழுமையான நிறைவு போல அது இல்லை :(

பின்னர் வேலை, திருமணம், குழந்தை என்று வாழ்க்கை மாறிவிட்டது!
இனி பொழிலனின் மே மாதங்களை தான் அழகாக்க வேண்டும்!!! :)))

(ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா... இதச் சொல்லவா இவ்வளவு பெரிய மொக்கைனு நீங்க புலம்புறது கேக்குது... என்ன செய்ய ஏதோ தோணுச்சு எழுதிட்டேன் அவ்வ்வ்வ் யாரும் அடிக்காதீங்க என்னிய)

பின்குறிப்பு:
என் மனசாட்சி:
அப்பா இந்த கொசுக்கடி தொல்லை தாங்க முடியல எல்லாருக்கும்! அடங்கவே மாட்டியா?

இதைத் தொடர் பதிவாக்கலாமா?

( மனசாட்சி: நீ எழுதுனதெல்லாம் ஒரு பதிவுனு இதுல தொடர் வேறயா?)

இன்றைய குழந்தைகள் அனிமேஷன் உலகம், கார்ட்டூன் படங்கள், வீடியோ கேம் என்று வீட்டிற்குள்ளேயே அதிகம் முடங்கியிருப்பதாக தகவல் :( எல்லாக் குழந்தைகளையும் கூறவில்லை ஆனால் பெரும்பான்மையான குழந்தைகள்????

நம் அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்வதன் மூலமும், படிப்பதன் மூலமும் பழைய நினைவுகள் மீண்டு நம் குழந்தைகளுக்கும் அப்படி விளையாடும் வாய்ப்பு கொடுப்போம் அல்லவா! அதற்காக தான் :)

இந்த மே மாத கொசுவர்த்தி சுருளைத் தொடர நான் அழைப்பது சில நட்சத்திர பதிவர்களைதான்!

*சித்திரக்கூடத்து சந்தனமுல்லை

*வானவில் வீதியில் வசிக்கும் கார்த்திக்

*எண்ணச் சிதறல்களை எழுத்துக்களாக்கும் வித்யா

எப்பவுமே உருப்படியாவே பதிவு எழுதிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்... அதனால என் புண்ணியத்துல ஒரு மொக்கை பதிவு! அதையும் உருப்படியா எழுதி கலக்கிடுவாங்கல... :))))

May 23, 2009

கர்ப்பிணிகளே.. பேசுங்க! பேசுங்க! பேசிக்கிட்டே இருங்க!



கர்ப்பிணி தாய்மார்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான வேண்டுகோள்!
என் அனுபவம் பற்றிய பதிவும் கூட! :)

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும் திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல் அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।

பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல் நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப் பரிச்சயமாகிவிடும்!
அதனால் நீங்கள் 5வது மாதம் முதலே உங்கள் குழந்தையிடம் கொஞ்சிப் பேசுவது, சிரிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது, பாடல் கேட்பது, குழந்தையை அழைப்பது போன்றவற்றை செய்து பாருங்கள்! பலன் தெரியும்!

அதோடு நிறைய நல்ல கதை புத்தகங்கள் படிக்கலாம்; ஆனால் சில பெண்கள் குழந்தையைப் பெரிய புத்திசாலி ஆக்கவேண்டும் என்று கர்ப்பம் தரித்தது முதலே பாடங்கள் வகை பிரித்து படிக்கின்றனர்; குறள், தமிழ் ஆங்கில எழுத்துகள், எண்கள், வாய்பாடு, பொது அறிவு போன்றவற்றை மனப்பாடம் செய்கின்றனர்; இது மிக மிக மிகக் கொடுமையான குற்றம்!

வயிற்றிலேயே குழந்தைக்கு ஏட்டுக்கல்வி தேவையா? :( அதன் மன நிலை பாதிக்கப்படாதா? நான் இப்படிப்பட்ட தாய்மார்களை பார்த்து தான் இதைக் கூறுகிறேன்

இரவும் கூட கண்விழித்து கால அட்டவணை போட்டு அதன் படி படிக்கிறார்களாம்; என்ன கொடுமை இது! :(

இப்படி வளரும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் புத்திசாலியாக இருந்தாலும் வளரும் போது மன நிலை பாதிக்கப்பட்டு, தன் சுய வேலைகளைச் செய்யத் தெரியாமல் படிப்பு மட்டுமே உலகம் என்று வாழ்ந்து இறுதியில் அதிலும் அடையாளம் இன்றி போகின்றனர்!

நமக்கு இது தேவை இல்லை; நான் கூறுவது ஆரோக்கியமான புத்தகங்கள் சில உங்களை வருத்தாமல் மன அமைதியுடன் படிக்கலாம்; நகைச்சுவை கேட்டு சிரிக்கலாம், தியானம் செய்யலாம், கதைகள் படித்து வாய்வழியே சத்தமாகக் குழந்தைக்குக் கூறலாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் தற்போது என்று விளக்கிக் கொண்டே உங்கள் வேலைகளைச் செய்யலாம்;

நிச்சயம் உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதைக் கேட்கும், பிறந்த பின் உங்களை எளிதில் மிக விரைவில் அடையாளம் காணும், வயிற்றில் இருக்கும் போது நீங்கள் கூறிய விஷயங்களை நேரில் காணும் போது அதற்கு அந்த நினைவு நிச்சயம் வரும் அதானால் எளிதில் புரிந்து கொள்ளும்!

உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய் விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!

இத்தனை விஷயங்களையும் என் அனுபவத்தை வைத்து தான் கூறுகிறேன்! என் அனுபவங்களைக் கேளுங்களேன்.....

* பொழிலன் வயிற்றில் இருக்கும் போது கரு ஆணா பெண்ணா என்று தெரியாது ஆகையால் பொதுவாக "செல்லக்குட்டி" என்று அழைப்பேன்
அவன் பிறந்து மருத்துவமனையில் இருந்து கூட வரவில்லை, அதற்குள் நான் படுக்கையிலிருந்து செல்லக்குட்டி என்று அழைத்தால் கண்ணைக் கூட திறக்காத என் பொழிலன் நான் இருக்கும் திசையில் என் குரல் கேட்ட பக்கம் நோக்கி தலையைத் திருப்புவான்! :)

*நான் அவனுக்கு காகம் தண்ணீர் அருந்திய கதையும், முயல்/ஆமை கதையும் அடிக்கடி கூறுவேன் கர்ப்பகாலத்தில்... அதனால் அந்த இரு கதைகளும் எப்போதும் தனி விருப்பக் கதைகளாகவே இருக்கின்றன அவனுக்கு!

*நான் பாடல், ஆடல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டு அவற்றை ரசிப்பதோடு "பாப்பா நீயும் பிறந்து வளர்ந்து இப்படி அழகா பாடனும், ஆடனும்"னு சொல்லுவேன்... அதுவும் இப்போதே செய்யத் துவங்கிவிட்டான்!
நின்று கொண்டு ஒரு கையால் யாரையாவது பிடித்துக்கொண்டு இன்னொரு கை, தலை, உடல், இடுப்பு என ஒவ்வொன்றையும் தனியே அசைத்து அழகாக ஆடுவான்; நான் முதலில் ஆடிக்காட்டுவேன் அதைப் பார்த்து அவனே செய்யத் துவங்கிவிட்டான்!

*பாடல்களும் அவனுக்கு எப்போதும் பிடித்தமானவை, ஏதாவது பாடல் பாடினாலே அழுகை நின்று சமத்தாகிவிடுவான்... இது பற்றி என்னுடைய பழைய பதிவுகளில் காணலாம்!

*நான் அவன் அம்மா என்று வயிற்றில் இருக்கும் போது பல முறை கூறியிருக்கிறேன் அதனால் தானோ என்னவோ அவன் முதல் மாதத்திலேயே அம்மா என்று அழுவான்! இதையும் பதிவிட்டிருக்கிறேன்!

*அவன் வயிற்றில் இருக்கும் போது வெகுநேரம் அசையாமல் இருந்தால் "பாப்பா செல்லகுட்டி என்ன பண்றே எழுந்துக்கோ அம்மா கூட பேசுடா" என்று கூறிக்கொண்டே இருந்தால் போதும் விரைவில் அசைய ஆரம்பித்துவிடுவான்!

*அதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களிலும், அதிகம் சிரிக்கும் தருணங்களிலும் பாப்பா உள்ளே செம குதியாட்டம் போடும்! :))))

இவை என்னுடைய அனுபவங்கள்!

பொதுவாக குழந்தை பிறக்கும் போது எல்லாவற்றையும் மறந்துவிடும், ஆனால் மீண்டும் அதே குரல், அதே பேச்சு, செய்திகளைக் கேட்கும் போது அனைத்தும் நினைவிற்கு வந்துவிடும்!

வளைகாப்பு கூட வளையல் சத்தம் குழந்தையை மகிழ்விக்கும் என்பதற்காகவே செய்யப்படுகிறது! :)))

அதனால் நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்! விபரீதமான முயற்சிகளில் இறங்காமல் நல்ல முறையில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!

கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையைப் பொறுத்தே குழந்தையின் மன வளர்ச்சி அமையும்!

அதனால் உங்கள் கர்ப்பகாலம் நல்ல முறையில் அமைய இறைவனை வேண்டிக்கொண்டு பயனுள்ள மொக்கையை முடிகிறேன்! :)