July 29, 2009

என்னதான் சொல்லவராங்க!

இந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் பல புதுமையாக இரசிக்கும் படி இருந்தாலும் இன்னும் பல விளம்பரங்கள் முகம் சுழிக்கும் படியாகவும், ஒரு அர்த்தமிள்ளாததாகவும் வெறுமனே மக்களைக் கவருவதை மட்டுமே கொண்டும் அமைக்கப்படுகின்றன!



அதிர்ஷ்டம் வருதய்யா:



ஏற்கனவே விளம்பரங்களை நான் துவைத்திருக்கிறேன! இது ஒரு அதிர்ஷ்டக் கல் பற்றிய விளம்பரம்! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சி காட்டுகிறார்கள்.... அதில் ஒரு காட்சி... அந்தக் கடையின் அதிர்ஷ்டக்கல்லை அணிந்த ஒரு சோம்பேறிக்கு(அதிர்ஷ்டக் கல்லை நம்பி தன்னம்பிக்கையை இழப்பவனை எப்படி சொல்வது?) நடு ரோட்டில் ரொக்கப் பணமாக ஒரு கட்டுக் கிடைக்கிறது! ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.... என்னதான் சொல்லவராங்க? இப்போ புரியுதாங்க நான் ஏன் சோம்பேறினு சொன்னேனு?



இதெல்லாம் ஒரு விளம்பரமா? உழைப்பின் மீதான நம்பிக்கையை விட அதிர்ஷ்டம் பெரியது என்றால் ஏன் நாமெல்லாம் விரும்பி வருந்தி உழைக்க வேண்டும்? பேசாமல் எல்லோரும் ஆளுக்கொரு அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டுக் கொள்வோம்! என்ன சொல்றீங்க?

பொழிலன் ஆல்பம்








பொழில்குட்டிக்கு பிறந்தநாள் விழாவில் வந்த பரிசுப்பொருட்கள் அத்துணையும் மிக அருமை! ஒவ்வொன்றும் ஒரு விதம்!

இப்போதிருந்து 4வயது வரை உபயோகப்படுத்தும் படியான உபயோகமான பரிசுகள்!

அதில் அவன் தற்சமயம் பயன்படுத்துவது அவனுடைய கிடாரையும் காரையும்தான்!

ஆனால் கார் முன்புறமாகச் செல்லாது பின்னோக்கிதான் செல்லும் ஏனென்றால் ஓட்டுனர் பொழிலன் பின் பக்கமானதான் ஓட்டுகிறார்! :)

அவருக்கு இரண்டு நாட்கள் பிறந்தநாள் கொண்டாடினோம்! உறவினர்களுக்காக அவர்களின் அன்பு விருப்பத்திற்கிணங்க... இந்த படங்கள் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்தவை! :)
கார்:
நானும் என் மாமனாரும் எங்கே பொழிலன் காரில் இருந்து விழுந்துவிடுவானோ என்ற பயத்தில் அவனைப் பிடித்திருக்க அவனோ தைரியமாக வண்டியை பின்னோக்கிக் கிளப்பிவிட்டான்!
கிடார்:
பொழிலன் கிடார் வாசிக்கும் இசைமழையில் நனைந்து கொண்டே எடுத்த புகைப்படம் மூன்றாவது! அவனுடன் இருப்பது என் அப்பா!
பிரணவ்:
இரண்டாவது படத்தில் என் பெரியமாமியாரின் கைக்குள் நின்று அவர் உதவியோடு கைதட்டுவது என் நாத்தனார் மகன் பிரணவ்! அழகான அருமையான வாலு! அழகாக கதைகள் சொல்வான் மழலை மொழியில்! அவனுக்கு இப்போது இரண்டரை வயது ஆகிறது! இப்போதே அழகாக எல்லோரின் பெயரையும் உறவுமுறையையும் மிகத் தெளிவாகச் சொல்கிறான்!
அவ்வுளவுதாங்க.... சிறப்பான படங்கள்! மற்றதெல்லாம் எங்கள் முகத்தோடு வந்து பயமுறுத்தும்! :))


July 24, 2009

மீண்டும் பள்ளிக்கு போகலாம் - தொடர் பதிவு!

"எதைச்சொல்ல" என்னும் பதிவில் தன்னுடைய பள்ளி அனுபவங்களை ஒரு அழகான கவிதையாக வடித்த "ஜோதி" அவர்களின் அழைப்பினை ஏற்று நானும் என் பள்ளி அனுபவங்களை ரொம்ப மொக்கை போடாமல் சுருக்கமாக சொல்கிறேன்! ஹி ஹி ஹி அவர் மாதிரி கவிதையெல்லாம் இல்லை வழக்கம் போல நம்ம ஸ்டைல் தான்!


******************************************

என்னுடையா பள்ளி வாழ்க்கை மிகவும் அருமையானது தான் பெரும்பாலானோரைப் போலவே! பாலர் பள்ளியில் படிக்கும்(??!! விளையாடும்) போதே ஞாயிறுகளில் கூட அம்மா கூலுக்கு அம்மா கூலுக்கு என்று என் பிஸ்கட் பாக்ஸ் எடுத்துக் கொண்டு கிளம்புவேனாம்! என் அம்மா இன்றும் கூறி சிலாகித்துக் கொள்வார்!



உண்மையில் எனக்கு பள்ளி செல்வதும் சரி கல்லூரி செல்வதும் சரி மிகவும் பிடித்தமானதாக இருந்தது! திருச்சியில் தான் பள்ளிக் கல்வி எனக்கு! படிப்பதற்கு ஏற்ற அருமையான நகரத்தில் அருமையான பள்ளியில் துவங்கிய என் அறிவுத் தேடல் இன்றும் கூகுளில் தொடர்கிறது! பின்ன மண்டையில அறிவு எங்கே ஏறுது! ஹி ஹி ஹி!

******************************************

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரில் சிலரை இன்றும் நன்றியுணர்ச்சியோடு மனதில் வணங்கிக் கொள்கிறேன்! ஆனால் ஒன்று நன்கு பாடம் நடத்தி எங்களையும் அன்போடு காணும் ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு என் மனதில் மதிப்பு உண்டோ அந்த அளவுக்கு ஒன்றும் சொல்லித் தராத(தெரிந்தால் தானே?) ஆசிரியர்கள் மீது வெறுப்பும் இருக்கும் எனக்கு!



என்னுடைய நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியவர்! என்னுடைய முதலாம் வகுப்பிலிருந்தே வருடந்தோறும் முதல் மாணவியாக பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வாங்கும் நான் ஆறாம் வகுப்பில் தான் கொஞ்சம் பின் தங்கி்னேன்! புதிய பள்ளி... புதிய சூழல், புதிய நட்பு என எல்லாமே புதுசு!



பின் ஏழாம் வகுப்பில் விட்டதைப் பிடித்துவிட்டேன்! 7ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து மீண்டும் முதல்/இரண்டாவது/மூன்றாவது மாணவிப் பரிசை வாங்கத் துவங்கிவிட்டேன் வருடந்தோறும்!

*****************************************

எங்கள் பள்ளியில் எப்போதும் போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்!
என் சொந்த விருப்பத்தினால் முடிந்த வரை அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுத்து அதிக பல்புகளும் சில பரிசுகளும் வாங்குவேன்!


பல்பு பொதுவாக தனி நடிப்பு, பாட்டுப் போட்டி இரண்டிலும் ரெடியாக இருக்கும் எனக்கென! பரிசும் தமிழ், ஆங்கில மொழிகள் இரண்டிலும் கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு தயாராக இருக்கும்! மற்றபடி பல பல பல்புகள் போட்டி மற்றும் போட்டியாளர்களைப் பொறுத்து சூப்பரா கிடைக்கும்! அரசியல்னா இதெல்லாம் ஜகஜம்! பல்புக்கெல்லாம் கவலைப் பட்டா எப்புடி?

ஆனால் பொதுஅறிவு வினாடிவினா, அறிவியல் வினாடிவினா, அறிவியல் ஆய்வுக்களம் மற்றுமாய்வுக் கட்டுரை போட்டிகளில் படிப்படியாக முன்னேறி தொடர்ந்து மூன்று வருடங்கள் மாநில அளவில் எங்கள் குழு பரிசுகள் வாங்கினோம்! அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று!

அறிவியல் வினாடிவினா தான் அருமை.... சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி? புத்தகத்தில் இருப்பது போன்ற கேள்விகள் தான் வரும்.... சுஜாதா போன்று பலர் அத்தகைய அறிவியல் விளக்க கேள்வி பதில் புத்தகங்களை எழுதியுள்ளனர்.... அவையெல்லாம் தான் கைகொடுத்துதவின! இவை குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமான புத்தகங்கள்! (நான் இப்போ ஒரு அம்மா எனும் நினைவு வந்துவிட்டதோ??)


ஆனால் எனக்கு ஓட்டப்பந்தயம்னா எப்பவும் பயம்! எங்கள் பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் இது! அப்போதெல்லாம் எனக்கு காய்ச்சல், வயிற்று வளி, கால் வலி போன்றவை வந்துவிடும் ஒரு கொஞ்ச நேரத்திற்கு! பின்ன என்ன சிறு பிள்ளையில் ஓடி ஓடி நிறைய விழுப்புண்கள் பெற்று அப்பா டின்சர் வைத்த அனுபவம் தான்! பலர் முன் ஏற்படும் தோல்வியின் மீதிருந்த பயமும் ஒரு காரணம்!

******************************************

பத்தாம் வகுப்பு வரை எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!

பதினோராம் வகுப்பில் தான் அந்த கெமிஸ்டிரி மிஸ் :( என்ன கொடுமை கெமிஸ்டிரி இது? வகுப்பில் அந்த அம்மா செய்யும் உருப்படியான ஒரே காரியம் டெஸ்ட்! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கெமிஸ்டிரி டெஸ்ட்!!!


அப்பாடா ஒரு வழியா டியூசன் வைத்து கெமிஸ்டிரியில் தேறியாச்சு! ஆனால் கணிதம்.... ஸ்ஸ்ஸ்ஸ் முடியல அந்த மிஸ் எல்லாத்தையும் டியூசன்ல தான் சொல்லிக்குடுப்பாங்க... வகுப்பில் நாங்களே தான் அவரிடம் டியூசன் போவோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்! :( கணக்குனாலே கசப்புதான் அப்போ! அது இன்னுமற்றபடி இயற்பியல், உயிரியல் பாடங்கள் அதி அற்புதம்! தமிழும் ஆங்கிலமும் அல்வா மாதிரி இனிப்பு!

*****************************************

ஆனால் பள்ளிப் பருவத்தில் அழகான அவஸ்தை பாவாடை தாவணி!! எங்காள் பள்ளி சீருடை!


இப்படி வழக்கமான பள்ளி அனுபவம் தான் எனினும் என்னை செம்மை படுத்திய, என் மனதை ஒரு நிலைப் படுத்திய ஒரு அற்புதமான பள்ளி நான் படித்தது! ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தபோவனத்தைச் சார்ந்த பள்ளி ஆதலால் நான் விவேகானந்தர் ரசிகை!



அதிக பட்ச இதிகாசக் கதைகளையும், தெய்வீகப் படைப்புகளையும் படிப்பதும் கீதை சுலோகங்களைப் பாடுவதும் எனக்கும் மிகவும் எளிதானதாக இருந்தது! பாடத சுலோகங்களும் அந்தாதிகளும் மிகக் குறைவு என்னும் அளவிற்கு எங்களுக்கு அவற்றை போதித்ததோடு, அன்பு, பண்பு, பக்தி, கடமை, ஒழுக்கம், மரியாதை, பணிவு, உதவுதல் என அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கு போதித்த அருமையான கோயில் எங்கள் பள்ளி!

ஆனால் இதையெல்லாம் நாங்க கடைப்பிடிக்கிறோமானு சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்...

இப்படி ஒரு சொர்க்க அனுபவம் வேறு ஒரு பள்ளியில் எனக்கு கிடைத்திருக்குமா தெரியவில்லை! அந்த வகையில் இறைவனுக்கு நன்றி!


*****************************************
இன்று என்னிடம் இருக்கும் தவறான பண்புகளுக்கு எப்படி நான் மட்டும் காரணமோ அப்படித்தான் என் நற்பண்புகளுக்கு என் பெற்றோரும், பள்ளியும், இறைவனும், திருக்குறளுமே காரணம்!

*****************************************

மனசாட்சி: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடிச்சிட்டியா சுபா? பள்ளி பற்றி ஏதோ எழுதுனு ஒரு அப்பாவி சொன்னாருனு இப்படியா எழுதுவ... விட்ட பகுதி ஒன்று இரண்டுனு எழுதுவே போலிருக்கே?

July 21, 2009

சுவாரசிய வலைப்பதிவு விருது!


இந்த விருதினை தொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கும், எனக்கு இவ்விருதினை வழங்கிய ஜோதிக்கும் என் நன்றிகள்!


நான் பெற்ற இவ்விருதினை எத்தனை பேருக்குதான் பகிட்ந்தளிப்பது...

நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பதிவுகள் ஏராளம், அதில் பலரை பின் தொடர்கிறேன் பலரை பின் தொடராமலேயே வாசிக்கிறேன்...

ஆனால் அனைத்துமே என்னைக் கவர்ந்த சுவாரசியமான பதிவுகள் தான் அவர்களுடைய பெரும்பான்மையான பதிவுகள்!
பொதுவாக எனக்கு நகைச்சுவைப் பதிவுகளும், குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் பதிவுகளும், கவிதைகள் மற்றும் இலக்கிய பதிவுகளும் மிகவும் பிடிக்கும், அந்த வகையில் பிரிவுக்கு ஒருவர் வீதம்
அதனால் யாருக்கெல்லாம் அளிப்பது என்ற குழப்பத்துடன் ஒரு நான்கு பேருக்கு பகிர்ந்தளிக்கிறேன்...


வானவில் வீதி கார்த்திக் - ஒரு நல்ல சுவாரசியமான யூத் ஃபுல் பதிவுகளின் இடம் இந்த வலைப்பூ

பூந்தளிர் தீஷூ - சுவாரசியமான பல ஆக்டிவிடிஸ்களை குழந்தைகளுக்காக விளக்கும் ஒரு அழகான வலைப்பூ

ஒண்ணுமில்லை ச்சும்மா அப்துல்லா - மொக்கையைக் கூட சுவாரசியமாக நகைச்சுவை உணர்வுடன் எழுதி நம்மையும் குறையாத ஆர்வத்துடன் படிக்க வைக்கும் வலைப்பூ
நிலாரசிகன் - அழகான கவிதைகளுக்கு சொந்தமான வலைப்பூ



July 20, 2009

ஒன்றாவது வயதில் பொழிலன்!

ஒரு வழியாக பொழில்குட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிவுற்றது! :)

பொழிலனின் வளர்ச்சியில் இந்த ஜூலை மாதம் அசுரவேக மாறுதல்களை உள்ளடக்கியது என்றே கூறலாம் :)

ஜூலை முதல் வாரத்தில் முளைக்க ஆரம்பித்த பல் இப்போது அவன் சிரிக்கும் போது அழகாகத் தெரிகிறது!

பல் முளைக்கிறது என்பதை எப்போது கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து அவர் ஒரு அழகு அழுகை அழுவாரே பார்க்கனும் அழகாக முகத்தையும் மூக்கையும் சுழித்து மேல் உதட்டை சற்று தூக்கி பல் தெரியும்படி ஒரு அழுகை... :) என் கண்ணே பட்டுவிடும்!

இப்போது நாம் பேசுவது மிக நன்றாகப் புரிகிறது... அவனும் ஒரு சில வார்த்தைகள் பேசுகிறான் தெளிவாக! எல்லாரையும் ஏய், இந்தா என்று அழைக்கிறான்.... வா, தா, தோசை மற்றும் விலங்குகளில் சிலவற்றின் ஆங்கிலப் பெயர்களை அரைகுறையாகக் கூறூகிறான்! மழலை இன்பம் மகத்தானது! இறைவனுக்கு நன்றி!

பொழிலம் பிறந்த நாள் பரிசுப் பொருட்களில் அவன் சித்தப்பா பரிசளித்த காரில் அமர்ந்து கொண்டு அதனை பின்னோக்கி ஓட்டிச் செல்வது காண கொள்ளை அழகு!

வீடெங்கிளும் ஒரு குட்டி அழகு செல்லம் ஓடிக் கொண்டும் நடமாடிக் கொண்டும் இருப்பது அந்த குழந்தை கிருஷ்ணனே வீட்டிற்குள் வந்தது போல மகிழ்ச்சியாக இருக்கு! :)

ஆனால் இவரோட சேட்டைகள் அபாரம்.... முடியல... கோவமும் எங்களுக்கு விழும் புரியாத மழலை திட்டும் ஹி ஹி ஹி! என்ன சொல்ல...

ரொம்ப பக்திமான் ஆகிட்டாரு பொழிலன்... எப்போது எங்கு சாமி படம் பார்த்தாலும் அப்படி சாமி கும்பிடுறான் அழகாக அந்த பிஞ்சுக் கைகளைக் கூப்பி! :)

பால் பாட்டில் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை திறந்து மூடக் கற்றுக் கொண்டபடியால் அதைப் பார்த்தாலே அந்த வேலையில் மூழ்கிவிடுகிறான்!

ஆனால் என் கைப்பேசி அவன் கையில் படும் பாடு இருக்கிறதே! :(
பல நாட்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து கிடக்கும் என் கைப்பேசி ஒரு நாள் சாப்பாட்டிற்கு அரிசி எடுத்து ஊற வைத்திருந்த குக்கரில்... :( நல்ல வேளை கைப்பேசி சோறு சமைக்காமல் போனோம்! :)

ஆனால் பொழிலன் வளர வளர மகிழ்ச்சியும் வளருகிறது! :)))

July 16, 2009

பொழிலன் பிறந்த நாள்!
















July 11, 2009

என் செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!



என் கையில் உனை ஏந்தி

உன்னில் என் உயிர் ஏத்தி

உன்

வாசமே சுவாசமாக

சுவாசமே நீயாக

உன்னையே நேசித்து

உன்னையே வாசித்து

உனக்கான எதிர்காலம்

என் கனவுகளாய்

என்றும் வேண்டுகிறேன்

இறைவனை உன் நலனுக்காக

என் அன்பு மகனே

உன் அம்மாவின் வாழ்த்துகள்

என்றும் உனதாகுக!!!


பிறந்த நாள் வாழ்த்துகள் பொழிலன்!