May 1, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

இந்த உலகத்தில் பெண் பிறவி எடுத்துவிட்டாலே அப்பிறவி முழுமையடைவது தாய்மையில் தான்!
தாய்மை என்பது ஒரு உணர்வு. அது வார்த்தைகளில் முழுமையாக அடங்காது. மனதிற்குள் பொங்கும் பாச வெள்ளம், உயிர் துடிப்பு, பிறவிப் பயன் இப்படி எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஒரு உணர்வு!

அம்மா நான் தாயான போதுதான் உன்னை அதிகம் உணர்ந்தேன்!

எந்த தாய்க்குமே தான் தாயான அந்த நிமிடங்களை வாழ்க்கையில மறக்கவே முடியாது. வாழ்க்கையில அப்படி ஒரு வலியை வேறு எதிலும் அனுபவிக்க முடியாது; அப்படி ஒரு மகிழ்ச்சியையும் வேறு எதிலும் அனுபவிக்க முடியாது! தாய்மை அடையுற அந்த நிமிடம் ஒரு ஆழ்நிலை தியானம் மாதிரி பரவசம் தரும்.

என்னுடைய அந்த பரவச நிலையை தான் நான் உங்களோட பகிர்ந்துக்கவும் அதை இங்கு பதிவு செய்யவும் போறேன்.

ஜூலை மாதம் 8ம் தேதி காலை எழுந்திருக்கும் போதே காலை கீழே ஊன முடியாத அளவுக்கு காலும் இடுப்பும் பயங்கர வலி. இது என்னுடைய 7வது மாதத்திலிருந்தே வருவதானாலும் அன்னைக்கு கொஞ்சம் கடுமையாவே இருந்தது. ஆனாலும் அந்த வலியோட சமாளிச்சு 13ம் தேதி வரை ஓட்டிட்டேன். ஆனால் 13ம் தேதி இரவு என்னால மறக்கவே முடியாது. அன்னைக்கு தூங்கபோகலாம்னு கட்டிலுக்கு போனேன் ஆனால் என்னால் கட்டிலில் சாயக் கூட முடியவில்லை. என்ன செய்தா எப்படி அட்ஜஸ்ட் பண்ணினா படுக்கலாம்னு எவ்வளவோ முயன்றேன். வயிறு வேறு மிகப் பெரிதா இருந்தது. நான் சிரமப் படுவதைப் பார்த்துட்டு என் அப்பாவும் அம்மாவும் என்னை கைத்தாங்காலாகப் பிடித்துப் படுக்கவைத்தனர்.

ஆனால் என்னால் வலியைப் பொறுத்துக்கவே முடியலை. என் அம்மாவிற்கும் நாங்கள் இருவரும் சிசேரியன் என்பதால் இந்த வலி பற்றி அவருக்கு தெரியவில்லை. நான் படித்தவரை எனக்கு வலி வந்த இடம் மட்டும் பிரசவ வலி வரும் இடங்களில் ஒன்றாக இருக்கவில்லை. என் அம்மா உடனே என் அத்தைக்கு போன் பண்ணி இது பற்றி கேட்டா அவங்களுக்கும் இது புரியல. ஒரு வழியா ஆஸ்பிடல் போலாம்னு கார்ல ஏறப்போனா என்னால தான் ஒரு அடி கூட வைக்கமுடியலையே. கடவுளே குழந்தைக்காகவாவது நான் கீழே விழாமல் கார்ல ஏறிடனும்னு வேண்டிக்கிட்டே 30னிமிடங்கள் போராடி 5அடி எடுத்து வைத்து கார் கிட்ட போயி எப்படியோ பாடுபட்டு என்னை அப்பா, அம்மா, தங்கை, சித்தி எல்லாரும் காருக்குள் உட்கார வைச்சாங்க. அந்த நேரத்துல என் கணவரை ரொம்ப மிஸ் பண்ணினேன்.
நான் வளைகாப்பு முடிந்து திருச்சி வந்திருந்தேன். அவங்க சென்னைல.

ஆஸ்பிடல் போனப்போ நள்ளிரவு 12ஐ தாண்டியாச்சு. அங்க லேபர் வார்டுல ஒரே டெர்ரர்... எல்லா சிஸ்டர்களும் இரத்த கறை படிந்த கவுன் மாட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்காங்க; உள் அறைல ஒரு பெண் ஐயோ அம்மானு அலறும் குரல் வேறு... அடிவயிற்றப் போட்டுப் பிசையிது; பயம் கவ்விக்கிச்சு :(
வலியோட துவக்கத்தையே தாங்கிக்க முடியலையே கிளைமேக்ஸை எப்படி தாங்கிக்கிறதுனு என் பாப்பாகிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன்... "பாப்பா எப்படியாவது சீக்கிரம் வந்துடுடா என்னால ரொம்ப நேரம் வலி பொறுக்க முடியாது உன்னைப் பார்த்துட்டேன அப்புறம் எந்த வலினாலும் தாங்கிக்குவேன்" அப்படினு பேசிக்கிட்டு இருந்தேன். இப்பவும் கணவர் நியாபகம் வேறு. நல்ல வேளை அவங்க இங்க இல்லைனு. பின்ன, பயந்துருப்பாங்கல.

அதுக்குள்ள உள்ள இருந்த பெண் " ஐயோ டாக்டர் இப்படி இழுத்து இழுத்து குத்துறீங்களேனு " கத்தி இன்னும் டெர்ரர் ஆக்குச்சு :( ஒரு வழியா குட்டிபாப்பா வந்துருச்சு... எனக்கு இல்லைங்க அவங்களுக்கு :)

அப்புறம் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து என்னை பரிசோதனை பண்ணிட்டு குழந்தை வர இன்னும் நிறைய டைம் இருக்கே தலை இப்போ செட் ஆகிருச்சு பட் குழந்தை இன்னும் கொஞ்ச நாள் உள்ளயே இருக்கட்டும்; உங்க வலி என்னனு நாளைக்கு ஆர்த்தோகிட்ட கேப்போம்" அப்படினு சொல்லிட்டு போயிட்டாங்க. :( எனக்கோ ஆகா இப்போ பாப்பாவ பார்க்க முடியாதா என்றாகிவிட்டது.

ஒரு வழியா ஆர்த்தோ வந்து என்னை பரிசோதனை பண்ணிட்டு "இது ஆர்த்தோ ப்ராப்ளம் இல்ல; இவங்களுக்கு கொஞ்சம் கிரிடிகலா லேபர் பெயின் வந்துருக்கு; இது கொஞ்சம் ரேரா சிலருக்கு தான் இப்படி வரும்... பெயின் கில்லர் கொடுத்து வலிய குறைக்கலாம் ஆனால் அது குழந்தைக்கு நல்லதல்ல அதுனால நீங்க முடிவு பண்ணிக்கோங்க" அப்படினு பிரசவ டாக்டர்கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு.

ஒரு ஸ்கேன் எடுத்து குழந்தை வளர்ச்சி முழுமையாகிடுச்சானு பார்த்துட்டு டெலிவரி பத்தி முடிவு பண்ணலாம்னு சொன்னாங்க. அதோட விட்டா பரவாலங்க; ஆனால் இந்த வலி எதுனாலனு பார்க்கனும்னு ஒரு எக்ஸ்-ரே வேறு எடுக்க சொன்னாங்க.

நானோ ஸ்கேன் ரூம் போறப்போ ஜாலியா போனேன். எல்லாம் ஸ்டெட்சர்ல வைத்துதான் கொண்டு போனாங்க.... ஆனாலும் குட்டிமாவ பார்க்கபோறோம் ஸ்கேன்லனு எனக்கு ஒரே கொண்டாட்டம். ஸ்கேன் ரிப்போர்ட்ல குட்டிமாவுக்கு தண்ணீர் போதது அதுனால குட்டிமா சீக்கிரம் உலகத்தைப் பார்த்தாகனும்னு வந்துருச்சு. அடுத்து இந்த எக்ஸ்-ரே... ஐயோ நான் அழுத அழுகை... எனக்கு என்னனாலும் பரவால நடக்கமுடியாமலே போனாலும் பரவால தயவுசெய்து இந்த எக்ஸ்-ரே மட்டும் வேண்டாம் அது என் பாப்பாவுக்கு பிரச்சனை ஆகிடக் கூடாதுனு அழுதுகிட்டே போனேன்... ஆனால் டாக்டர் 9மாதத்தில் இது குழந்தையை பாதிக்காது பயப்படவேண்டாம்னு சொன்னாலும் பெத்துக்க போற மனசு கேக்குதா. :(

ஒரு வழியா அதையும் முடிச்சு பார்த்தா இது லேபர் பெயின் தான் இடுப்பு எலும்புகள் பிளவுபட்டு இருக்கு... காலோட சேரும் இடத்துல :( இதுக்கு சிகிச்சையும் இல்லை... தானாகவே சேர்ந்தா தான் உண்டு... சில பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் அது தாய்மைக்கு நல்லதல்லவாம். ஆர்த்தோ வந்து இவுங்களால நார்மல் டெலிவெரிக்கு சப்போர்ட் பண்ண முடியாது அப்படியே பண்ணினாலும் அதுக்குப் பிறகு நடக்கவே முடியாதுனு சொல்லிட்டாரு :( அப்புறம் என்ன சிசேரியன் தான். முதலில் வயிற்றைத் தடவிப் பார்த்து அழுதேன். அப்புறம் ஓகே ஆகிட்டேன். பின்ன பாப்பா வந்துடும்ல; அந்த சந்தோஷம் தான். :) :) :)

அப்பாடா இன்னைக்கு இந்த மொக்கை போதும்... நாளைக்கு நோ மொக்கை ஏனா பொழில்குட்டி வெளிய வந்துடுவாரு :) :) :)

ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதா??? நாளைக்கு ஃபிரெஷ் ஆகிடும் :)

5 comments:

ஆகாய நதி said...

//
இது போல் பல தாய்மார்கள், தத்தம் அனுபவத்தை ,எழுதினால்தான்,பல பெண்மணிகள் ,தேவையற்ற பயம் தெளிந்து பிரசவ காலத்தை ,இயற்கையோடு இணைந்த விஷயமாக ஆரோக்கியமாக எதிர்கொள்வார்கள்.
//

என்ற goma அவர்களின் கருத்தினால் எழுதிய பதிவு இது.

jothi said...

// தாய்மை என்பது ஒரு உணர்வு. அது வார்த்தைகளில் முழுமையாக அடங்காது. மனதிற்குள் பொங்கும் பாச வெள்ளம், உயிர் துடிப்பு, பிறவிப் பயன் இப்படி எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஒரு உணர்வு! //

உண்மைதான். நன்றாக எழுதி இருக்கீர்கள். மனைவி தவிக்கிறாளே என்று வெளியில் பதற்றதுடன் ஆண்களால் நிற்க மட்டுமே முடியும். இன்பங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பை அளித்த இறைவன், துன்பத்தில் எந்த பங்கையும் கொடுக்கவில்லை (ஹாஸ்பிடல் செலவை தவிர).

goma said...

அம்மாடி ஆத்தாடி எவ்வளவு சிரமப் பட்டிருக்கீங்க...ஆனால் பட்ட சிரமும் அத்தனையும் பனி போல் பக்கத்தில் உறங்கும் இளம் தளிர் கண்டு ,போயே போச்சு இட்ஸ் கான்,போயிந்தே ...[சரிதானே?]
இதை வாசிக்கும் அனைவருமே, குழந்தைப்பேறுகாலத்தை ,
ஒரு பெண்ணின் மறுபிறவி என்பதை உணருவார்கள்.

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! :)

சரியாகக் கூறினீர்கள் :)

ஆனால் என் கணவரையும் சும்மா சொல்லக்கூடாது... அந்த மேட்டர் வரும் பதிவில்... :)

ஆகாய நதி said...

உண்மைதான் goma... :)
எனக்கு அவனைக் கண்டதும் வலி போயே போச்சு :)

குழந்தைப் பேறு என்பது பெண்ணின் மறுபிறவியே... :) அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை!